Saturday, August 8, 2009

ஸ்மைல் ப்ளீஸ் !

புகைபடமென்பது பாட்டிக்காலத்து சுருக்குப்பை காசைப்போல காலத்தை களவாடி வைத்துக்கொள்ளும் காகித அச்சாகவே இருக்கின்றது . சிறு வயதிலிருந்தே காமிரா என்பது ஒரு கனவுப்போருளாகவே இருந்து வந்தாலும் ... நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் எண்ணிக்கையோ நிறைய உண்டு ,குறிப்பிட்டு சொல்வதாயின் என்னுடைய எல்லா முகப்பாவங்களிலும் பல கருப்பு வெள்ளை படங்களும் , சில வண்ணப்படங்களும் கிட்டும் !


ஆரம்ப காலங்களில் எங்கள் ஊர் நடுநிலைப்பள்ளியில் படித்தபோது ,ஆண்டு இறுதிகளில் வகுப்புவாரியாக புகைப்படமெடுத்து தருவார்கள் . நான் வாத்தியார் புள்ளை என்பதால் எனக்கு இலவசமாகவே கிடைக்கும்,மற்றவர்கள் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வார்கள் . அந்த மேற்படி நாளில் காலையிலிருந்தே சந்தோசம் ( அது சந்தோசமா இல்லை ஆர்வமா என்று இன்றும் புரிவதில்லை ) தாளமுடியாமல் செக்காளிகளுடன் சேர்ந்து சாயங்காலத்தில் யார் யார் அருகில் யார் நிற்பதென்பது பேசி வைக்கப்படும் ,பெரும்பாலும் கடைசி வரிசையில் போடப்படும் உயர்ந்த பெஞ்சின் மேல் ஏறி நிற்பதற்கே போட்டிகள் அதிகம் ! அதே சமயத்தில் சட்டை ( வெள்ளை சட்டையும் , நீல நிற அரைக்கால்சட்டையும்) அழுக்காகி விடகூடாதென்பதிலும் கவனமாயிருந்தது இன்னும் நினைவிலிருக்கிறது . மாலை நாலு மணிக்கெல்லாம் அந்த வேப்பமரத்தினடியில் போட்டோ எடுக்க ஆரம்பிப்பார்கள் , முன்னமே பேசி வைத்தார்ப்போல செக்காளிகளுடன் சேர்ந்து நிக்கலாமேன்றால் இந்த போட்டோ எடுப்பவன் விடாமல் என்னையே குறிவைத்து " அந்த குட்டத்தம்பி முன்னால வாப்பா " என்பான் .... எல்லோருக்கும் ஆத்திரம் வரும் எனக்கு மட்டும் அழுகை பொங்கி வர கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரம் போட்டோவில் தெரியுமாறு செய்து , பின்பு அழுகையை அடக்கி மூஞ்சை மாற்றுவதற்குள் , அவன் போட்டோவை எடுத்து முடித்திருப்பான் - இப்பொழுதுதான் உண்மையிலே கண்ணீர் முட்டிக்கொண்டு வரும் . அப்படியே எட்டாம் வகுப்புக்கு வகுப்பாசிரியரான அப்பாவிடம் சென்று அடம்பிடித்து அவருடனாவது நிக்கலாமேன்றால் , இந்த பாழாய்ப்போன அக்காமார்கள் கூப்பிட்டு " சார் பையன் " என்று அருகில் நிற்க வைத்துவிடுவார்கள். மறுபடியும் முகம் கோணி , அழுகை முட்டுவதற்குள் சுதாரித்துக்கொண்டு போட்டோவிற்கு முறைத்து வைப்பேன். ஆம் நிஜமாகவே எனக்கு காமிரா முன் மட்டும்தான் முறைக்க வரும். ஆனால் இப்படியாக தோல்வியில் முடிந்த ஒவ்வொரு போட்டோபிடிப்பு நிகழ்விற்கு பின்னரும் இரண்டு நாள்களுக்கு வகுப்பிற்கு சென்றதில்லை . பரட்டைத்தலை பயலுகளை விட இந்த குட்டைப்பாவாடைகள் ரொம்பவே பளிப்பு காட்டுவார்கள் . யாராவது ஒவ்வொரு முறை " அழுமூஞ்சி அம்மனாங்கி " என ஆரம்பிக்கும்போதும் ," எங்க அப்பாகிட்ட சொல்றேன் பாரு " என்று அப்பாவை தாங்கி நிற்பேன் . இதனால்தானோ என்னவோ அதற்க்கப்புறம் அந்த பள்ளியில் இருந்து தாண்டிய பின்பும் கூட , காமிராவுக்கு முன்பு நிற்கும் ஆர்வம் வெகுவாக குறைந்து , காமிராவுக்கு பின்னால் நிற்கும் ஆசை அதிகமாகியது . அதற்கப்புறம் கல்லூரி முடித்து வேலைக்கு வந்த பின்னால் , ஒரு மெழுகுவர்த்தியை கூட விடாமல் இரண்டு மணிநேரம் எரியவிட்டு படம்பிடித்ததெல்லாம் தனிக்கதை .பேரனுடன் போட்டோ எடுக்க சென்றிருந்த அப்பா, போட்டோவுக்கு நிற்பதற்குள் இவன் பண்ணிய ரகளைகளை என்னோடு ஒப்பிட்டு கூறியபோது மனதிற்குள் நினைத்துகொண்டேன் அடுத்த பிறந்தநாளுக்கு அவனுக்கு காமிரா பரிசளிப்பதென்று!


-ஜோ

2 comments:

Unknown said...

Joe,
unnoda last post compare panrapo...ithu inamum touchy a irunthirukalam nu thonuthu...

Last la sariya varla nu ninaikren..
cinema la climax change panra mathri...ithala ethavathu try panlanu thonuthu
-indu

ஜெனோவா said...

Sure Indu.. Will do that..Thanks