Tuesday, September 22, 2009

நட்பென்பது யாதெனில் ...

புதுக்கல்லறையொன்று முளைத்திருப்பதாய்
கரையான்களில் ஒன்று வந்து சொல்லியது
யாரென்றேன் , தெரியாதென்றது
ஆணா ? பெண்ணா? என்றதிற்கு
ஆண் , ஆனால் என் வயசிருக்குமென்றது
என் வயதில் யாராயிருக்கும் என யோசித்து
பட்டியல் தாயாரித்து வினவியபோது
கரையான் சொன்ன அடையாளங்கள்
என் பட்டியல் பெயர்களுடன்
ஒத்துவராமல் போகவே
புதுமுகங்கள் சந்திப்புக்கு செல்வதாய்
முடிவுசெய்தாயிற்று
அரங்கம் இன்று பாதி நிறைந்திருந்தது
மூன்றாவதாய்
நீ அறிமுகம் செய்விக்கபட்டாய்
தூரத்திலிருந்தாலும் அடையாளம் கண்டுகொண்டேன்
அருகில் வந்து
வழக்கம்போல் சத்தம்போட்டு சிரித்து
"சாயங்காலம் பார்ப்போம் மச்சி" என்ற உன்னை
ஏமாற்ற மனம் இல்லாமல்
"இங்க டாஸ்மாக்கும் இல்ல ஒன்னும் இல்லடா "
"என்ன எழவு சொர்க்கமோ ", சலித்துக்கொண்டு
கைவசம் இருந்த குவார்டரில்
பாதியை ஊற்றிதந்தேன் ....