Thursday, December 17, 2009

வேறோர் இடத்திற்கு !


இங்கிருந்து
வேறோர் இடத்திற்கு தூக்கிச்
சென்றுகொண்டிருந்தார் .
இரவாடை அணிந்து சிரித்த முகமாய்
நடக்க இயலாமல் ஒரு காலை
சாய்த்துக்கொண்டு
நின்றிருந்தது .
இடுப்பைப் பிடித்து இறுக்கி
துணிக்கடை
பொம்மையை தூக்கிசெல்லும் போதும் கூட
வெட்கப்பட்டு
தரை பார்த்துச் சிரிக்கிறார்
இந்த வேலையாள் !



Tuesday, December 15, 2009

நிகழ்வுகள் !

துரத்திச் சென்று

பிடிக்கப்பார்த்தார்

சிக்னல்

தாண்டிச் சென்றவனை .

'அய்யோ, பிடிக்க வருகிறாரே ' பயத்தில்

வேகமாய் அவன் .

'ச்ச்சே , பிடிக்க முடியவில்லையே '

விரக்தியில் அவர் .

'அய், நல்லவேளை பிடிக்கவில்லை ' பின்னால்

தொடர்ந்து சென்று சிக்னல்

தாண்டிய நான் !

Monday, December 14, 2009

எதையாவது சொல்லி ....

மிகவும் மென்மையான
இசையோடு
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
பாடல்
என் அறையில் .
புத்தி பேதலித்தவன் மாதிரி
அலறிக்கொண்டிருக்கிறார்கள்
யாரோ
உள்ளுக்குள் .
என்ன பொய் சொல்லி
சமாளித்தால்
நீங்கள் நம்பிவிடுவீர்களென
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
இப்பொழுது !

Tuesday, December 8, 2009

ஈரம் !


இட்லியும்
மல்லிச்சட்னியும் நம்மூர் மாதிரி
நல்லாயிருக்கும்னு
கூட்டிட்டுப் போனான் நண்பன் .
சாம்பார் கூட விசேஷமாகத்தான் இருந்தது
பில்லும் குறைச்சல்தான்
நாளைக்கும் இங்கயே சாப்பிட
வந்திருப்பேன்
கை அலம்புகையில்,
தடுப்புக்குப் பின்னால் தொட்டித்
தண்ணீரில் நின்றுகொண்டு
தட்டைக் கழுவும் உன்
முகத்தை மட்டும்
பார்க்காமலிருந்திருந்தால் !

Friday, December 4, 2009

சௌகரியங்கள் !



இருக்கும் வீட்டை மாற்றி

வேறுவீடு பார்க்கலாமென

முடிவெடுத்தாகிவிட்டது .



அம்மாவுக்கும் அப்பாவுக்கும்

முன்புபோல் இப்பொழுதெல்லாம் முடிவதில்லை

தரைத்தள வீடு அவசியம்.



பள்ளிக்கூடம் பக்கத்திலிருந்தால்

பையனைக் கூட்டிப்போக வர

இலகுவாக இருக்கும்.



அடுக்குமாடி

குடியிருப்புகளில் எனக்கு

அவ்வளவாக விருப்பம் இருந்ததில்லை .



புதுஇடத்தில் நல்ல

வேலைக்காரி அமைந்துவிட்டால்

மனைவியோடு மல்லுக்கட்டல் இருக்காது .



பூங்கா ஒன்றும் அருகிருந்தால்

அப்பாவின்

சாயங்காலங்கள் இனிமைப்படும் .



எல்லாம் ஒருவழியாய்

அமைந்துவிடலாம் ஆனால் என்ன

அம்மாவுக்குதான்

சௌகரியப்படாமல் போகக்கூடும் புதுவீடு ,

என்ன செய்ய ?

இப்போதெல்லாம்

இந்தியக் கழிவறைகள் கொண்ட

வீடுகள் கிடைப்பதுதான்

அபூர்வமாயிருக்கிறது இந்நகரத்தில் !.


(உரையாடல் அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது )

Tuesday, December 1, 2009

வேடிக்கை !




நிச்சயமாய்
அறுபது வயதிற்குமேல் இருக்கும் அவருக்கு
ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு வெளியே
சாலையோரத்தில்
பொம்மைகளை விற்றுக்கொண்டிருந்தார் .
சிவப்பு, பச்சை,நீலமென்று
வேறு வேறு நிற வடிவங்களில்
பஞ்சு பஞ்சாய் பொதிந்து
குண்டு குண்டாய் பொம்மைகள் வைத்திருந்தார் .
குழந்தைகளுக்கு வைக்கும்
கிரீடமொன்றை வைத்துக்கொண்டும்
ஜிகினா பூ சட்டை ,
சிவப்பு பச்சை சேர்ந்த நிறத்தில்
பிளாஸ்டிக் கண்ணாடி என
ஒரு குருகுறுப்போடவே சுற்றிக்கொண்டிருந்தார் .
பாவாடைச் சட்டை சிறுமிகள் அவரைத்
தொட்டு விட்டு ஓடிவந்து
சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் .
பிடிக்கவருவதைப் போல பாவலாக்காட்டி
பின்னாலேயே ஓடிவந்தவர்
எதிர்ப்பக்க உணவகத்தை ஒரு
பார்வை பார்த்துவிட்டு
மீண்டு(ம்)
துரத்திச் சென்றுகொண்டிருக்கிறார் சிறுமிகளை இப்போது
!