Monday, April 26, 2010

நாலே நாலு நாள் !

"நாலு நாள் கழிச்சி வந்து வாங்கிக்கப்பா " என்று
பால்காரனிடம் சொல்லும்
அதே பதில்
கொஞ்சம் தொனி மாறி
"நாலாந் தேதிக்கப்புறம் தந்துடுறேன் "
என்றாகிப்போகும் வட்டிக்காரனிடம் .

நாலாம் தேதியும்
மாமா பூ வாங்கிவரவில்லையெனில்
ரெண்டு தெரு தாண்டிச்சென்று
கோமதி அக்காவிடம் அதே
"நாலு நாள் மந்திரத்தை"
சொல்லவேண்டியிருக்கும் .

நாலு நாலு நாட்களாகவே
தொடரும் அக்காவின் மாதம்
மாதக்கடைசி வரும்போது
ஏழாவது முறையாக
மீண்டும் ஆரம்பிக்கும்
வெவ்வேறு தொனிகளுடன் !

Friday, April 23, 2010

ஒளி மூடிய உன் இரவு !

அணிந்திருந்த
முத்துக்களைஎல்லாம் விசிறிஎறிந்து
மூளியாய் நிற்கிறாய்
போர்த்தியிருந்த
மேலாடையையாவது வைத்திருக்கலாம்
அதையும் அவிழ்த்தெறிந்து
அரை நிர்வாண அழகியாய்
சலனப் படுத்துகிறாய்
ஆரவாரம் கொள்ளக் காத்திருக்கும் தெரு
படுத்திருக்கும் மடக்குக் கட்டில்
பல்லிளிக்கும் நட்சத்திர முத்துக்கள்
அரை நிர்வாண நிலையில் நீ
ஒளி மூடிய உன் இரவு
வேறென்ன வேண்டும் நான்
மோகம் கொள்ள !

Monday, April 19, 2010

'மில்லி 'யால் கொள்ளி

சுள்ளி பொறுக்க போன
செல்வி அக்காவுக்கு
கருவேலங் காட்டுக்குள்ளையே பொறந்தான்
மொத பையன்.

மூக்கு சீந்திவிடக்கூட ஆளில்லாம
சீள்பட்ட செல்விக்கென்று
தெனந்தெனம் ராத்திரி மட்டுந்தான்
ஒத்த ஆளு துணையுண்டு .

துணையாம் துணை
காபிக் குடிச்சாலே சண்டைக்குப் போகும்
கசவாளிப் பய
கண்ட கருமத்த குடிச்சா என்ன செய்வாம் ?

பொறவு
ஆளு அனக்கம் இல்லாம கெடக்கும்
ரெண்டு நாளு வீடு

வழக்கம் போல யாரும் கண்டுகிடல
பக்கத்து வீட்டு பொம்பள பாத்து அலறி
ஊர கூட்டுத வரைக்கும் .

செய்தி : கணவன் தொல்லையால் விஷம் அருந்தி தாய் சேய் மரணம் .

Friday, April 16, 2010

செய்யப்பட்ட தற்செயல்கள் !

பின்னொருநாளில்
மறுபடியும் பார்ப்பேனென்று
முன்னமே தெரியாது
தற்செயலாய் சந்திக்க நேர்ந்தது
நற்செயலாகத்தான் தெரிந்தது
ஒரே வாரத்தில்
பல
தற்செயல்கள் செய்யப்பட்டன
மீள்சந்திப்பு
நாள்கணக்கில் நீண்டது
ஆயுசுக்கணக்கில் நீளுமா ? தெரியாது ..
நீளலாம் அல்லது நீங்கலாம்
ஆனால்
இப்போதைக்கு
'மறுபடியும் பார்த்தோம் - பேசினோம் '
அவ்வளவுதான் !


டிஸ்கி : யாருகிட்டயாவது சொல்லனும்னு தோணுச்சி அதான் இங்க .. இப்படி

Monday, April 12, 2010

முகமூடியுடன் தொலைந்துபோ !

அழுதுவிடுவோம் என
பயப்படும் பொழுதுகளில்
யாரிடமும் பேசாமலிருப்பது நல்லது
முக்கியமாக நெருங்கிய நட்புகளிடம்
இதுநாள்வரையில் போர்த்தியிருந்த
கம்பீர முகமூடி கிழியக்கூடும்
நமக்கென்றிருந்த மாயபிம்பம் ஒன்று
சுக்குநூறாகும்
தனிமை அழுந்த
மதுவருந்தும் எண்ணம் மேலோங்கும்
பிறகு என்னதான் செய்யலாம்
நெரிசலான கடைவீதியில் புகுந்து
தொலையலாம்
பாலுக்காக அழும் குழந்தையிடம் சென்று
விளையாட்டுக் காட்டலாம்
அப்படி எதுவும் கிட்டாத தருணங்களில்
இப்படி வேண்டா வெறுப்பாக
எதையாவது
கிறுக்கியும் தொலைக்கலாம் !