Tuesday, March 30, 2010

வீணாப்போன வாதங்கள் !

குழு விவாதம் என்று
அழைத்தார்கள் - சென்றேன்
வாழக்கற்றுக்கொள் என்றான் ஒருவன்
வேலையைக் கற்றுக்கொள் என்கிறான் இன்னொருவன்
வாழ்க்கைக்காகத்தான் வேலை
வேலைக்காகத்தான் வாழ்க்கை என்று
எப்படியெல்லாமோ சொல்லிக் குழப்பிக்
கடைசியில்
இரண்டற கலந்ததுதான் வாழ்க்கை என்ற
வாதத்திற்கு வந்தார்கள்
எனக்கு சலிப்பு தட்டிவிட்டது
அடப்போங்கப்பா
ரெண்டும் எங்க இருக்கணுமோ
அங்கேயே இருக்கட்டும்னு சொல்லி
வந்துட்டேன் .

Friday, March 19, 2010

எல்லோருக்குமான ....

எல்லோருக்கும் பொதுவான நதி
ஓடிக்கொண்டே இருக்கிறது
எல்லோருக்கும் பொதுவென்று
எண்ணமுடியாதபடி
குளித்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி
படித்துறையில் கொஞ்சநேரம்
அலைந்துகொண்டிருந்துவிட்டு
அசைந்து அசைந்து
ஆழம் செல்கிறாள்
கூழாங்கற்களோடு குறுகுறுக்கிறாள்
பாறைகளோடு வன்புணர்வு கொள்கிறாள்
திரும்பவும் கரை திரும்புகிறாள்
எல்லோருக்கும் பொதுவென்று
சொல்லிவிடமுடியாது அவளை...
சிலர் மூக்கைப் பிடித்துக்கொண்டு
முங்கி எழுகிறார்கள்
சிலர்
செம்புக்குடம் நிரப்பிச் செல்கிறார்கள்
சிலர் மட்டுமே
அள்ளியெடுத்து பருகிச் செல்கிறார்கள்
எல்லோருக்கும் பொதுவான நதியொருத்தி
ஓடிக்கொண்டே இருக்கிறாள் !

Thursday, March 18, 2010

ஒரு தலையாய்....

பாதி ராத்திரியில்
பாம்புகள் நெளியும்
கனவுகளாலேயே
விழிக்க வேண்டியுள்ளது.

உறங்கச் செல்லுமுன்
ஒன்றிரண்டு
குறுஞ்செய்திகளை
அனுப்பிவை.

மேற்கொண்டு
பாம்புகளையெல்லாம்
பட்டாம்பூச்சியாக்குவதை
நான்
பார்த்துக்கொள்கிறேன்.


************************

ஒரு
சிறு கல்லை
கையிலெடுத்துக் கொண்டு
முறைக்கிறான்
பக்கத்துவீட்டுச் சிறுவன்.
சொல்
வேறு எங்கெல்லாம்
உனக்கு ஆட்கள் இருக்கிறார்கள் ?
நான்
நாலு இடம் போறவன்.


************************


எதையாவது
பராக்குப் பார்ப்பதை
போலாவது
என்னையும்
பார்த்துவிட்டுப் போ!


************************

Friday, March 12, 2010

காதலியின் பெயரை முன்வைத்து ...

ஓர் அழகிய வண்ணத்தாளில்
கவிதையாக
கிறுக்கியிருக்கலாம்

ஒரு சில்வண்டின்
ரீங்காரம் போல
பாடிக்காட்டியிருக்கலாம்

தீர்ந்துபோன குவளைத்தண்ணிரின்
கடைசி சொட்டில் விரல் நனைத்து
தரையில் எழுதியிருக்கலாம்

மெல்லிய ராகமாய்
அவளின் காதருகில்
முணுமுணுத்திருக்கலாம்

காதலியின்
பெயரை வைத்துக்கொண்டு
இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம்

எங்கெங்கோ சுற்றித்திரியும்
இந்த
ரயில்வண்டியின் கழிவறையில்
காதலியின் பெயரெழுதிச்
சென்றவனை
என்ன செய்யலாம் ?

Tuesday, March 9, 2010

பாவ மன்னிப்பு !

பாவங்களை யெல்லாம்
மன்னிக்கிறாரென்று
கேள்விப்பட்டு
கோவிலுக்குச் சென்றேன்
படுபாவிகள்
அவரையே
கழுவிலேற்றி
வைத்திருந்தார்கள் !

Tuesday, March 2, 2010

ஒரு பித்துக்குளியின் கடைசி மூன்று நாட்குறிப்புகள் !

முதல் பக்கம் :

எனக்கு
கொஞ்சநாளாய்
மனப்பித்து இருப்பதாக
உணர்கிறேன்
உங்களுக்கு புரியும்படி சொல்வதானால்
ஸ்கிசோஃப்ரினியா நோய் .

இரண்டாம் பக்கம் :

மூன்று வயதாகும்
என்
குழந்தை
பள்ளிக்குப் போகிறாள்
இன்றைக்கு அணிந்திருக்கும்
ஆடையின் நிறம் சிவப்பு
அழகாய்
சிரிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறாள் .

குழந்தை இருக்கும் வீடு
அழகானதுதான்
ஆனால்
அதை பெற்றுக்கொள்வதற்கு
மனைவியும்
ஒரு வீடும்
வேண்டும் .

மூன்றாம் மற்றும் கடைசி பக்கம் :

நீங்கள்
கட்டியிருக்கும் இந்த
கழுத்து சுருக்கு
அதாவது
டை
பளிச்சென்று இருக்கிறது .

கனத்த சுருக்குகள் போடும் விதம்
பற்றி
உங்களுக்கு
சொல்லித் தரலாமென்றால்
மேஜையில் இருந்த
மஞ்சள்நிற நைலான் கயிறை
இப்போது பார்த்துக் காணவில்லை
இருங்கள்
என் தனியறையில்
இருந்தாலும் இருக்கும்
தேடிக் கொண்டு வருகிறேன் .