Thursday, December 17, 2009

வேறோர் இடத்திற்கு !


இங்கிருந்து
வேறோர் இடத்திற்கு தூக்கிச்
சென்றுகொண்டிருந்தார் .
இரவாடை அணிந்து சிரித்த முகமாய்
நடக்க இயலாமல் ஒரு காலை
சாய்த்துக்கொண்டு
நின்றிருந்தது .
இடுப்பைப் பிடித்து இறுக்கி
துணிக்கடை
பொம்மையை தூக்கிசெல்லும் போதும் கூட
வெட்கப்பட்டு
தரை பார்த்துச் சிரிக்கிறார்
இந்த வேலையாள் !



Tuesday, December 15, 2009

நிகழ்வுகள் !

துரத்திச் சென்று

பிடிக்கப்பார்த்தார்

சிக்னல்

தாண்டிச் சென்றவனை .

'அய்யோ, பிடிக்க வருகிறாரே ' பயத்தில்

வேகமாய் அவன் .

'ச்ச்சே , பிடிக்க முடியவில்லையே '

விரக்தியில் அவர் .

'அய், நல்லவேளை பிடிக்கவில்லை ' பின்னால்

தொடர்ந்து சென்று சிக்னல்

தாண்டிய நான் !

Monday, December 14, 2009

எதையாவது சொல்லி ....

மிகவும் மென்மையான
இசையோடு
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
பாடல்
என் அறையில் .
புத்தி பேதலித்தவன் மாதிரி
அலறிக்கொண்டிருக்கிறார்கள்
யாரோ
உள்ளுக்குள் .
என்ன பொய் சொல்லி
சமாளித்தால்
நீங்கள் நம்பிவிடுவீர்களென
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
இப்பொழுது !

Tuesday, December 8, 2009

ஈரம் !


இட்லியும்
மல்லிச்சட்னியும் நம்மூர் மாதிரி
நல்லாயிருக்கும்னு
கூட்டிட்டுப் போனான் நண்பன் .
சாம்பார் கூட விசேஷமாகத்தான் இருந்தது
பில்லும் குறைச்சல்தான்
நாளைக்கும் இங்கயே சாப்பிட
வந்திருப்பேன்
கை அலம்புகையில்,
தடுப்புக்குப் பின்னால் தொட்டித்
தண்ணீரில் நின்றுகொண்டு
தட்டைக் கழுவும் உன்
முகத்தை மட்டும்
பார்க்காமலிருந்திருந்தால் !

Friday, December 4, 2009

சௌகரியங்கள் !



இருக்கும் வீட்டை மாற்றி

வேறுவீடு பார்க்கலாமென

முடிவெடுத்தாகிவிட்டது .



அம்மாவுக்கும் அப்பாவுக்கும்

முன்புபோல் இப்பொழுதெல்லாம் முடிவதில்லை

தரைத்தள வீடு அவசியம்.



பள்ளிக்கூடம் பக்கத்திலிருந்தால்

பையனைக் கூட்டிப்போக வர

இலகுவாக இருக்கும்.



அடுக்குமாடி

குடியிருப்புகளில் எனக்கு

அவ்வளவாக விருப்பம் இருந்ததில்லை .



புதுஇடத்தில் நல்ல

வேலைக்காரி அமைந்துவிட்டால்

மனைவியோடு மல்லுக்கட்டல் இருக்காது .



பூங்கா ஒன்றும் அருகிருந்தால்

அப்பாவின்

சாயங்காலங்கள் இனிமைப்படும் .



எல்லாம் ஒருவழியாய்

அமைந்துவிடலாம் ஆனால் என்ன

அம்மாவுக்குதான்

சௌகரியப்படாமல் போகக்கூடும் புதுவீடு ,

என்ன செய்ய ?

இப்போதெல்லாம்

இந்தியக் கழிவறைகள் கொண்ட

வீடுகள் கிடைப்பதுதான்

அபூர்வமாயிருக்கிறது இந்நகரத்தில் !.


(உரையாடல் அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது )

Tuesday, December 1, 2009

வேடிக்கை !




நிச்சயமாய்
அறுபது வயதிற்குமேல் இருக்கும் அவருக்கு
ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு வெளியே
சாலையோரத்தில்
பொம்மைகளை விற்றுக்கொண்டிருந்தார் .
சிவப்பு, பச்சை,நீலமென்று
வேறு வேறு நிற வடிவங்களில்
பஞ்சு பஞ்சாய் பொதிந்து
குண்டு குண்டாய் பொம்மைகள் வைத்திருந்தார் .
குழந்தைகளுக்கு வைக்கும்
கிரீடமொன்றை வைத்துக்கொண்டும்
ஜிகினா பூ சட்டை ,
சிவப்பு பச்சை சேர்ந்த நிறத்தில்
பிளாஸ்டிக் கண்ணாடி என
ஒரு குருகுறுப்போடவே சுற்றிக்கொண்டிருந்தார் .
பாவாடைச் சட்டை சிறுமிகள் அவரைத்
தொட்டு விட்டு ஓடிவந்து
சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் .
பிடிக்கவருவதைப் போல பாவலாக்காட்டி
பின்னாலேயே ஓடிவந்தவர்
எதிர்ப்பக்க உணவகத்தை ஒரு
பார்வை பார்த்துவிட்டு
மீண்டு(ம்)
துரத்திச் சென்றுகொண்டிருக்கிறார் சிறுமிகளை இப்போது
!

Wednesday, November 25, 2009

சிவானசமுத்ரம் புகைப்படங்கள் .



















Thursday, November 19, 2009

கைமருந்து

அம்மா
எல்லா உபாதைகளுக்கும்
ஏதேனும் ஒரு கைமருந்து வைத்திருப்பாள் .

தின்னது செரிக்காமல்
வயிறு ஊதிக்கொண்டு அசமந்தமாக இருந்தால்
இஞ்சி போட்டு இடிச்சி
கைவசம் கசாயம் தயாராக இருக்கும் .

வேப்பிலை, மஞ்சளோடு
காட்டு நொச்சியையும் சேர்த்துப் போட்டு அவிச்சி
இரண்டு வேளை ஆவி பிடித்தால்
தலைவலியோ , பாரமோ காணாமல் போய்விடும் .

நெருஞ்சி முள் போல
உடம்பெல்லாம் சொறி எடுத்தால்
குப்பைமேனி கீரை அரைத்து
உடம்பெல்லாம் பூசி குளிக்கவைப்பாள்.

கத்திவெட்டுக்கு காபித்தூளும்
காலில் முள் தைத்தால் எருக்கலம்பாலும்
மணத்தக்காளி கீரையும் கூட
அம்மாவின் கண்டுபிடிப்புகள்தான் .

எல்லாத்துக்கும் ஒரு கைமருந்து வைத்திருந்தாலும்
இப்போவரை அம்மாவிடம் மருந்தில்லாத ஒரே உபாதை
தினந்தோறும் சாயங்காலம் ஏழு மணிக்கு வந்துபோகும்
அப்பாவின் குடிப்பழக்கம் மட்டும்தான் .


Wednesday, November 18, 2009

குழந்தையாகிப் பின் ....


ஒவ்வொருவராய்
முன்னால் வந்து ஆச்சர்யம் காட்டியும்
இங்கேப்பாரென சொல்லியும்
புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
புறக்கணிக்கும்விதமாய்
காலுக்கடியில் ஊர்ந்துக்கொண்டிருந்த
கட்டெறும்பையே
குனிந்து பார்த்துக்கொண்டிருந்தது குழந்தை.

Tuesday, November 17, 2009

நவீன விருட்சம்

என்னுடைய காக்கை கூடு படைப்பு நவீன விருட்சம், 15.11.2009 இதழில் வெளியாகியிருக்கிறது.




Sunday, November 15, 2009

சனிக்கிழமை இரவும் ஒரு மதுபான விடுதியும் .

 
 






 1.   உள்ளொன்று வைத்து 
      வெளியொன்று பேசும்விதமாய் இல்லாமல்
      வெளிப்படையாகவே
      திறந்தும் வரவேற்றும் கிடக்கின்றன
      மதுபான விடுதிகள்.

 

2.   வண்ண விளக்குகளின் உச்சத்தில் 
      மின்னும் ஆடைகளுடன்
      கண்சிமிட்டி ஆடும் நடனக்காரிகளிடம்
      கவனம் தேவை .
      சிலசமயம்
      மனசையும் ஆட்டிவிடுகிறார்கள்
      அதிலும் அந்த ஆரஞ்சுக்கலர்
      சேலைக்காரி
      கொள்ளைக்காரி .

 

3.   இடுப்பில் குழந்தையுடன்
     அவளை எங்கோ பார்த்திருப்பதாய்
      நண்பன் சொன்னதிலிருந்து
      ரசிக்கமுடியவில்லை
     அவளின் அரையும் குறையுமான
     ஆட்டத்தை .

 

4.   எதை எதையோ 
     கலந்து கொடுத்தார்களென நினைக்கிறேன்
     நல்லவேளை
     சாராய நாத்தம் அடிக்கவில்லை
     வீட்டுக்கு வந்தபோது .

 

5.   விடியும்போது வந்து உறங்கி
     முழிப்பு வரும் சமயம் 
     உணரப்படும் தலைக்குத்தலோடு
     கூடவே வந்து போகிறது
     நடனக்காரிகளின்
    முகங்களும் .



Wednesday, November 11, 2009

பல்விழும் வயதில் ...

பேத்திகள்
கல்கோனா முட்டாய் சாப்பிட சொன்னதற்க்காய்
சாப்பிட்டு முன்பல் உடைத்துக்கொண்டார் அப்பா .

தாத்தாவிற்கும்
தங்களைப் போல் பல் விழுந்ததில்
பேத்திகளுக்கும் சந்தோசம் .

அப்பாகூட
பல் விழுந்ததை
பெருமையாகத்தான் சொல்லிக்கொண்டார் .

எல்லா நிகழ்வுகளைப்போலவும்
வழக்கம் போல
பெரிதாய் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை அம்மா .


கம்பீரமாகவே பார்த்துப் பழகிவிட்ட அப்பாவை
இப்படி முன்பல்லில்லாமல் பார்க்க
எனக்குத்தான் கொஞ்சம் கஷ்டமாயிருக்கிறது .

Tuesday, November 10, 2009

ஒடங்காடாடுதல்

முள்ளு பாய்ஞ்ச ஒடங்காட்டுக்குள்ள
தலையை எட்டிப் பார்த்து ஒளிஞ்சிகிடும் ஒடக்கானை
சுருக்கு கண்ணி வச்சி பிடிச்சிட்டு வந்து
தெருச் சந்தியில சுடுமணல் மூடி
கருங்கல்லையும் மேல் தூக்கி வச்சி
கொலகாரங்கனக்கா சுத்தி நிப்போம் .

நாலு பெயலுவ ஒடக்கானைச் சுற்றி கம்போடு நிக்க
எவனாவது ஒருத்தன் ஓடிப்போய்

அம்மாச்சியின் பொடித்தடையில் பாதியை களவாண்டுட்டு வர
மூக்குப்பொடியை ஏத்திவிட்டு
கிறுகிறுத்து தலைசுற்றும் ஒடக்கான் முன்னால ஓட
தகர டப்பாவுல கொட்டடிச்சி பின்னால நாங்க ஓடுவோம் .

ஒடக்கான் கடிச்சா பெறவு பீயக்கரச்சிதான் குடிக்கனும்னு
எப்பம்பாத்தாலும் வையும் பொன்னுக் கெழவிக்கிட்ட
அப்பன்னா நீ முதல்ல குடிகெழவின்னு
ஒடக்காங்கயிரை கெழவிக்கிட்ட தாரதுமாரி பாவலாக்காட்டி
"குசும்புக்கார பெயயுள்ள" ன்னு கிழவி காரித்துப்புன பெறவு
பளிஞ்சான் காட்டி கோயில் ஆலமரத்துக்கு கூட்டம் ஓடும் .

ஆலம்விழுதுல தலைகீழ தொங்கவிட்டு
ஆளுக்கு மூணு கல்லு கணக்குல
மண்டையிலே குறிவச்சு எரிய
மயங்கிய மாறியே செத்தும் போகுமந்த ஒடக்கானை
முதமாரியே தகர டப்பா கொட்டடிச்சி
குழிதோண்டி ஒன்னுக்கடிச்சி

பெதச்சிட்டு வீட்டுக்கு வந்தா
முறிச்சி வச்ச வேப்பம் கம்போட
எதிர்பார்த்து உக்காந்திருப்பார்
திண்ணையில் அப்பா .

Thursday, November 5, 2009

பச்சிளம் பொழுதுகள் !!


என்னை
பார்த்து பார்த்து அழுவதற்கென்றே
எப்படியாவது
ஒரு குழந்தையேனும் பயணிக்கிறது
என் எல்லா ரயில் பயணங்களிலும் .

***********************

பூச்சாண்டிட்ட புடிச்சு குடுத்துருவேன்னு சொல்லி
என்னை காண்பித்தபோது
பருப்பு பிசைந்த சோற்றில் பாதியை
பயந்துகொண்டே
விழுங்கியது பக்கத்துவீட்டுக் குழந்தை .

*************************
மறைந்தும்
பின் வெளிவந்தும்
மாறி மாறி
பளித்து விளையாடிய குழந்தையை
பதிலுக்கு பளித்தபோது
சந்தோசத்தில் சிரித்து ஒளிந்துகொண்டது .

Wednesday, November 4, 2009

பிடித்தும் பிடிக்காதவை ( தொடர் பதிவு )

தோழர் மாதவராஜ் அவர்கள் ஆரம்பித்து வைத்ததிலிருந்தே ஒவ்வொரு பதிவாக சென்று , பிடித்த , பிடிக்காதவைகளைஎல்லாம் விடாமல் படித்துக்கொண்டிருந்தேன் . நண்பர் நர்சிம் எழுதியிருந்த பதிவையும் படித்துக்கொண்டே வந்தால் , இறுதியில் இருந்தது அதிர்ச்சி - அட !நம்பளையும் அழைத்திருந்தார் . பிடித்தது ,பிடிக்காதது எல்லாவற்றையும் கிறுக்கி வைத்திருக்கிறேன் , பிழையிருந்தால் சுட்டுங்கள் தோழ்ர்களே !

ஆரம்பித்த தோழர் மாதவர்ஜுக்கும் , அழைத்த நண்பர் நர்சிம் அவர்களுக்கும் நன்றிகள் பல ...

இந்தப் பதிவோட விதிகள்:(பரிசல் குரலில்) >> இது கட் காபி பேஸ்ட்

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.


என்
பங்குக்கு எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை: இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும். இல்லீன்னா பாரதிக்கப்புறம் கவிஞரே இல்லை, காமராஜருக்கப்புறம் தலைவரே இல்லைங்கற உண்மைகள் தொடர்ந்துட்டே இருக்கும். இருக்கறவங்கள்ல பெஸ்ட், வொர்ஸ்டைச் சொல்லுவோமே! (எப்படி மாட்டிவிட்டேன் பார்த்தீங்களா!)

********************

இனிமே தான் நான் ,



1.அரசியல் தலைவர் :
பிடித்தவர் : யாரையும் குறிப்பிடும் அளவுக்கு இன்னும் வளரவில்லை . ;-)

பிடிக்காதவர்: மு.க கூட்டம்


2.எழுத்தாளர்
பிடித்தவர் : இப்போதைக்கு வண்ண நிலவன் .
பிடிக்காதவர் : ஜெயமோகன்

3.கவிஞர்
பிடித்தவர்: நா .முத்துக்குமார்
பிடிக்காதவர் : பா. விஜய்

4.இயக்குனர்
பிடித்தவர்: யதார்த்தமாய் இயக்கும் எல்லோரும் .
பிடிக்காதவர் : பேரரசு

5.நடிகர்
பிடித்தவர்: மாதவன் (அன்பே சிவம் , தம்பி , எவனோ ஒருவன் ,நளதமயந்தி)
பிடிக்காதவர் : விஷால்

6.நடிகை
பிடித்தவர் : ஷாலினி
பிடிக்காதவர் : ஸ்ரேயா ( நடிப்புல மட்டும்தான் ஹி ஹி )

7.இசையமைப்பாளர்
பிடித்தவர் : சமீபமாய் ஹாரிஸ்
பிடிக்காதவர் : குறிப்பிட இயலவில்லை ( எல்லோருடைய இசையிலும் எதோ ஒன்று பிடித்துபோய் விடுகிறது )

8. தொழிலதிபர்
பிடித்தவர் : சக்தி மசாலா குழுமம் .

பிடிக்காதவர் : மத்தவங்க படத்தையெல்லாம் புடுங்கி திரையிடுற ரெண்டு பேரக் கண்டாலே ஆகாது .

9.பிடித்த ஒளிப்பதிவாளர் :இதில் பிடித்த ஒளிப்பதிவாளர்களை மட்டும் சொல்வதாய் எண்ணம்

பி . சி . ஸ்ரீராம்
சந்தோஷ் சிவன்
கே . வி . ஆனந்த்
சதீஷ் குமார் ( பேராண்மை )

10.விளையாட்டு
பிடித்தது : கால்பந்து

பிடிக்காதது : சிறுவயதில் எப்போதுமே தோற்றுக்கொண்டிருந்த கோலிக்குண்டு ;-))

தொடர அழைப்பது :
மண்குதிரை
பிரியமுடன் வசந்த்
சேரல்





Tuesday, November 3, 2009

சில நிமிட மனிதம் !


சிக்னலில்
அடைத்து நிற்கும் வாகன நெரிசலில்
சிக்கி
வளைந்தும் நெளிந்தும்
சில வாகனங்களைத் தொட்டும்
வருகிறது
அந்த பிச்சைக்காரக் கிழவியின்
கிழிந்த சேலை நுனி.

Monday, November 2, 2009

நீர்த்துப்போனவைகள் !


கரும் பெரும் விழிகள் முழித்து
மீசை முறுக்கி
அருவாளேந்திய அய்யனார் சாமி
தப்பு செய்பவர்களை கண்ணை குத்துமென்று
சிலையைக்கடந்து வெளியூர் செல்லும்போதெல்லாம்
சொல்லிக்கொண்டே வருவாள் பாட்டி .
வெயிலடர்ந்த ஒரு மதிய வேளையில்
கள்ளன் போலீஸ் ஆட்டத்தினூடே
சிலையின் மறைவில்
தாடிக்காரனோடு ஒரு பொம்பளையும் இருந்ததை பார்த்தப்பிறகு
பாட்டி சொன்ன
முறுக்கு மீசை , முழிக்கண்
அருவாளையும் தாண்டி
அய்யனார் சாமி வெறும்
உருவப்பொம்மை என்றேப்பட்டது .

Friday, October 30, 2009

வெந்து தணிந்த பாறைகள் !!

ஆர்ப்பரிக்கும் அருவிகளிநூடே ஒரு சிற்றருவி !

நுரைத்து ஓடும் வெள்ளம் !

பிரதான அருவிகள் , கர்நாடக பக்கம் .

பரிசல்கார அண்ணனுக்கு என் பரிசு !! ( அண்ணா வந்து பாருங்க !!)

ஓடு மீன் ஓட --- கொக்கு கூட்டம் !

பிரதான அருவிகள் - தமிழக பக்கம் .

அடுத்த பயணிகள் வருவார்களா ?

நிலவுச் சூரிய அஸ்தமனம் !

பிரதான அருவி - ஒரு தூரப் பார்வை !

பார்த்த உங்களுக்கான பரிசு - எடுத்துக்கோங்க !!

Thursday, October 29, 2009

அழுகி நாறிய வாழ்க்கை !


மாறச்சொன்னது வயது -
விரும்பவில்லை நான் .
மாற்றம் வேண்டுமென்றது காலம் -
அப்புறம் பார்ப்போம் என்றேன்.
வேறு மனிதனாய் மாறி வா என்றது காதல்
தூக்கியெறிந்தேன் காதலை.
வயதும் வழியும் இழந்து
நின்ற கணமொன்றில்
மாறித்தான் பாரேன் என்றது மனது -
தோல்வியைக்கண்டு மாறும்
கோழை நானில்லை என்றேன் நான் .
அலைகளால் அலைகழிக்கப்பட்டு
கரை ஒதுங்கிய பிணமொன்றைப்போல
இக்கணத்தில்
மாற்றத்தின் வீச்சத்தில் நாரிக்கிடக்கிறேன்.
என்னிலைகண்டு
பல்லிளித்த இயற்கைக்கு
நான் இன்னும் மாறவில்லைதான்
மாற்றம்தான்
மாறிவிட்டதென பதிலளிக்கிறேன் .
யாரோ
என்னைப்பார்த்து ஏளனமாய்
பேசி சிரித்து
சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில்.

Monday, October 26, 2009

தாய்க்கோழி



சத்தம் கேட்டு புறக்கடைக்கு ஓடுவதற்குள்
செவலை நிற குஞ்சியை மட்டும்
காகமோ பருந்தோ தூக்கிவிட்டுப் போனதை
கடிதத்தில் எழுதியிருந்தாள் அம்மா.
பறிகொடுத்த ஆத்திரத்திலும்
பயத்திலும் கெக்கரித்து
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும்
தாய்க்கோழியின் கண்கள் மனதில் வந்தன.
இனிமேல்
படியில் தொங்கிக்கொண்டு போகக்கூடாதென
மனதுக்குள் சொல்லிக்கொண்டேன் .

Tuesday, October 20, 2009

ரெண்டாந்தரம்



கடைசி வார சந்தையில்
வாங்கித்தருவதாய் சொல்வாள் அம்மா .
பொத்தான்கள் இல்லாத
அண்ணனின் பழைய பள்ளிச்சீருடைகள்தான்
எல்லா வருட பள்ளி முதல் நாளிலும் .

பழைய புத்தகத்தில் படித்தால்
நிறைய குறிப்புகள் கிடைக்குமென்பார் அப்பா.
அக்கா படித்துக்கிழித்த பழைய தமிழ் புத்தகத்தில்
கடவுள் வாழ்த்தும் இன்னும் பல செய்யுள்களும்
எப்போதுமே கிழிந்து போயிருக்கும் .

அம்மா தரும் எட்டணாவில்
ஒன்னுக்கு இடைவெளியில் அண்ணனிடம் போனால்
அஞ்சு கல்கோனா முட்டாய்கள் வாங்கி
ரெண்டு மட்டும் தருவான்.
அக்கா பாதிகடித்த புளியங்காய் தருவாள் .

அண்ணன் இந்த வருடம்
கல்லூரி செல்வதாய் கூறி
ஒருவருடம் கடையில் நிக்க சொன்னார் அப்பா .
அக்காவும் படிக்க ஆசைப்பட்டபோது
நான் கடையிலே நின்று விட்டேன் .

மேலத்தெரு செல்வியின்கணவன்
இறந்தது தெரியுமென்றாலும்
காதலிப்பதாய் சொன்னபோது ஒத்துக்கொண்டாள்.
அப்பாதான்
மானத்தை வாங்கிவிட்டதாய் சொல்லி
அடித்து விரட்டிவிட்டார் வீட்டைவிட்டு .

Wednesday, October 14, 2009

சதுரங்க நாயகி


கருப்புக் குதிரையில்
நான் நான்கு கட்டங்கள் தாவுகிறேன்
வெள்ளை யானையில் நீ
வேகமாய் எதிர்பக்கம் கடந்துவிடுகிறாய்
உன் வேகத்தை நிகர்செய்ய முற்பட்டு
கோட்டையை நகர்த்துகிறேன் உன் பக்கமாய்
மறைந்திருந்த உன் வெள்ளை குதிரைகளுள் ஒன்று
கோட்டையை ஆட்டத்திலிருந்து வெளியேற்றுகிறது
தற்காப்பு ஆட்டமுறையாக
வெறும் சிப்பாய்களை மட்டும்
ஒவ்வொரு கட்டமாய் நகர்த்திவைக்கிறேன்
எதிர்பார்க்காத ஒரு கணத்தில்
இன்னும் நான்கு நகர்த்துதலில் ஆட்டம் முடியும் , என்கிறாய் நீ .
காய்களை இழக்காமல் தோற்கடிப்பதெப்படி என்ற
உன் சதுரங்க தந்திரங்களை அறியாமலே
தோற்றும் போகிறேன் நான் .

Monday, September 28, 2009

மழைத்துணி துடைத்தெடுத்திருந்த
கண்ணாடி தார்ச்சாலை
வெளிச்சங்களாய் நின்றிருந்த
உலோக மரங்கள்
நடுநிசியாதலால்
நாய்கள் கூடும் ரோடுகள்
முன்பக்கம் முழுவதுமாய் சப்பிய பைக்
மண்டை உடைந்தொளுகிய ரத்தம்
வேட்டைக்குத் தப்பிய மானொன்றைப்போல
நாலுகால் பாய்ச்சலில் வாகன விலங்குகள்
சரேலென்று கடந்து சென்றது
ஒரு கால் சென்டர் குவாலிஸ்
அதைதொடர்வதாய் ஒரு லாரியும்
பின்
ஒரு சுமோ என
வரிசையாய் ஒவ்வொன்றாய் வரத்தொடங்கின
கடைசியில் வந்தான் ஒரு சைக்கிள் காரன்
பார்த்து
படபடத்து அலறி
கூட்டம் கூடுவதற்குள்
அநேகமாய் செத்து போயிருந்தேன் நான் .

Friday, September 25, 2009

புழு(து)க் கொலை !!

வெளிக்கிருக்கச்செல்கையில்

தோட்டத்தில்

நேற்று பார்த்த இடத்திலேயே பார்த்தேனந்த மண்புழுவை .

முதுகில் ஒட்டியிருந்த

மிகச்சிறு சிறு மண் உருண்டைகளோடு

நீண்டு சற்று தடித்து

அடர் கருஞ்சிவப்பு நிறமாய்

அசைவுகளற்று இருந்தது .

மண்புழுவில் நிறைய நேரங்களில்

முன் பின் பாதிகள்

கண்டுகொள்ள முடிந்ததில்லை

மலம் கழித்துக்கொண்டே

அருகிலிருந்த விளக்குமாத்துக் குச்சியால்

லேசாக குத்தினேன்

அமைதியான இயக்கம் பார்க்கமுடிந்தது .

வீட்டுக்குள்ளிருந்து

அம்மா சத்தம்போட்டு கூப்பிட்டாள்

விருட்டென எழுந்து

குதிங்கால் ரப்பர் செருப்பால்

தலையெனப்பட்டதை

அரக்கிவிட்டு ஓடுவதற்கு முன்னால்

நசிந்து இறந்திருந்த புழுவை

யாரும் பார்க்காதவாறு

மண்ணுக்குள்

புதைத்துவிட்டு ஓடியாந்தேன் .

"சாமியிடம் அப்புறம் சொல்லிக்கொள்ளலாம் நடந்த கொலையைப்பற்றி "

மனதுக்குள்

ஒரு திட்டமும் போட்டாயிற்று இப்போது .

Tuesday, September 22, 2009

நட்பென்பது யாதெனில் ...

புதுக்கல்லறையொன்று முளைத்திருப்பதாய்
கரையான்களில் ஒன்று வந்து சொல்லியது
யாரென்றேன் , தெரியாதென்றது
ஆணா ? பெண்ணா? என்றதிற்கு
ஆண் , ஆனால் என் வயசிருக்குமென்றது
என் வயதில் யாராயிருக்கும் என யோசித்து
பட்டியல் தாயாரித்து வினவியபோது
கரையான் சொன்ன அடையாளங்கள்
என் பட்டியல் பெயர்களுடன்
ஒத்துவராமல் போகவே
புதுமுகங்கள் சந்திப்புக்கு செல்வதாய்
முடிவுசெய்தாயிற்று
அரங்கம் இன்று பாதி நிறைந்திருந்தது
மூன்றாவதாய்
நீ அறிமுகம் செய்விக்கபட்டாய்
தூரத்திலிருந்தாலும் அடையாளம் கண்டுகொண்டேன்
அருகில் வந்து
வழக்கம்போல் சத்தம்போட்டு சிரித்து
"சாயங்காலம் பார்ப்போம் மச்சி" என்ற உன்னை
ஏமாற்ற மனம் இல்லாமல்
"இங்க டாஸ்மாக்கும் இல்ல ஒன்னும் இல்லடா "
"என்ன எழவு சொர்க்கமோ ", சலித்துக்கொண்டு
கைவசம் இருந்த குவார்டரில்
பாதியை ஊற்றிதந்தேன் ....

Monday, September 21, 2009

காக்கை கூடு !!

எங்கள் வீட்டுமுன் வேப்பமரத்தில்
புதிதாக
இரண்டு காக்கைகள் கூடுவைத்துள்ளன .

காக்கைகளினால்
பொழுதுகளில் சங்கடமும்
சமயங்களில் பலன்களும் வரலாம் .

நாளை மறுநாள் வரப்போகும் பங்காளிகளை
இன்றே
கரைந்து காட்டிக்கொடுத்துவிடும் .

தப்பித்தவறி எச்சமிட்டுவிட்டாலும்
நல்ல அதிஷ்டக்காரன் என்றொரு
பட்டம் கிடைக்கும் .

ஆனால்
இவள்தான் .....

கூட்டிலிருந்த கருவேல முள் விழுந்து
முற்றம் முழுவதும்
குப்பையாகிரதென்பாள் .

துணி தொவைத்து ஒன்றைக்கூட
மரத்தடியில்
காயபோட முடியவில்லை என்பாள் .

காக்கை என்பதை
அருவருப்பாய் மட்டுமே பார்ப்பவளுக்கு
எப்படி புரியவைப்பது ?
இந்த கூடு
நிறைய நேரங்களில்
தயிர் பிசைந்து ஊட்டிய அம்மையை
நினைவுபடுத்துகிறதென்பதை.


குறிப்பு : அவள் என்பதை வீட்டுக்காரி என்றும் அவளுக்குத்தெரியாமல் பொருள் கொள்ளலாம் .

Saturday, September 19, 2009

உன்னைப்போல் ஒருவன் !!

கணக்கிலேழுதிவிட்டு
அண்ணாச்சி கொடுத்த
அரைக்கிலோ நாட்டுத்தக்காளி
அரைமுடி தேங்காய்
முருங்கைக்காய் இளசாக இரண்டு
முட்டைகோஸ் பாதி
கொசுறாக
கொஞ்சம் கருவேப்பிலையும் மல்லித்தளையும்
வாங்கித்திரும்புகையில்

கூப்பிட்டு
இரண்டு கையெறி குண்டுகளும்
போட்டுவிட்டார் மளிகை சாமான் பையில் .


Thursday, September 17, 2009

கூட்டிக்கொண்டு போய்விடு சீக்கிரம் !


குளிருக்குள்ளிருந்த அதிகாலை உறக்கத்தில்

முதுகில்தட்டி எழுப்பிவிட்டாய்

தலைக்குளித்திருந்தாய்

என்னுள் ஈரம் அப்பிக்கொண்டது .

"வெளியில் தூறல் போடுகிறது "

என்ன செய்யலாமென்பதுபோல் கண்ணடித்தேன்

கலங்கரை விளக்கத்தின் ஒளி

விட்டு விட்டு

வீட்டை வெளிச்சமாக்கிகொண்டிருந்தது

ஜன்னல்கம்பி ஊடே கடல் பார்த்தாய்

நான் ஷூக்கள் அணிந்துகொண்டேன் .

"நிறைய பேசணும்டா"

என்ன ?

"நீ வந்து பார் அதை "

எதை ?

ஆறுமணி காலையில்

அரை தூக்கத்தில் எழுப்பிபேச என்ன இருக்கும் ?

குழப்பத்தில் குழம்பிப்போய்

சொல்லும்மா ...

கட்டாயமாய் கையைபிடித்திழுத்து

முட்டளவில் கடலலை ...

குழப்பத்தில் வெறுப்பை பேசும் முன்னால்

கண் சிமிட்டி

வாயில் விரல் வைத்து

பேசாமல் வாவென்பதுபோல் சைகை செய்து

கைவீசி முன்னால் நடந்துக்கொண்டிருக்கிறாய்

கடலலையின்மேல் !!

 

Tuesday, September 15, 2009

கரிப்புகைகளடர்ந்த ஓட்டத்திற்கு ஆயத்தமாய்

ஒரு உலோகககுலுக்கல்.

உடைந்து சிதறி பிளிறிய

ஹார்ன் சத்தம் .

சோளம் பார்த்த ரயிலடிகள்

அல்லது - புகை படர்ந்த

சோளக்காடுகள் .

வீரியம் விழுங்கப்பட்ட வெண்கல கதிர்கள்

வேகம் குறைந்த சூரிய பொம்மை .

வெளிச்ச உறக்கத்தின்

கருப்பு பூபோட்ட போர்வைகள் மூடிய

இருட்டுக்குள் பயணங்கள் .

போர்வைகள் விலக்கிய வெள்ளை பகலொன்றில்

வெயிலேறி

சோளப்பற்கள் கொட்டிக் கிடந்த

அதே

சோளக்காட்டு தண்டவாளங்களுக்குள் உடல் நசிந்திருந்த

இரண்டு அழுக்கு சவங்களின் அடையாளம்

தற்கொலை என்றும் ஒதுக்கப்படலாம் !!

Sunday, September 13, 2009

இரு கவிதைகள் !!

"அரை மாத்திரை மட்டும் போடுங்க "
டாக்டரின்
அறிவுறுத்தலை மறந்து
அரை மணிக்கொன்றாக
மூன்று போட்டபிறகும்
இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்
காணமல் போனவர் பெயர்
உறக்கம் என்று !!


-----------------------------------------------------

கண்ணை மூடினால்
காலையில் பார்த்த
கோரமான சாலை விபத்தே
வந்து போகிறது !
என்னருகில் நின்றிருந்த
பார்வையற்றவர்க்கு
நல்லவேளை
இந்த பிரச்சனை இருக்காது !!.


-ஜெனோவா

Friday, September 11, 2009

இருக்கலாம் !!!

  • அறை நண்பன் !!

மாதத்தின்

முதல் வாரயிறுதி நாட்களில்

ஆயிரங்கள் செலவழித்து

முடிந்துபோன முந்தைய காதல்கள் பேசி

போதையில் நிலைமறந்து

"வ்வோவ் " என்று வாந்தி எடுத்தவனை

முகங்சுருக்கி தள்ளியவன்

ஒருவேளை அவனின்

அறை நண்பனாகவும் இருக்கலாம் !!

  • போலீஸ் காரர்

வேம்படிப் பிள்ளையாரின் கற்பூர தூணுக்கு முன்னால்

மண்டையில் கொட்டிக்கொண்டு

காதில் பூவுடன் தோப்புகரணம் போடும்

உள்ளூர் போலீஸ்காரர் .

-ஜெனோவா

Thursday, September 10, 2009

மூன்று கவிதைகள் !!



  • தகவல்

காலையில் வர


தாமதமாகுமென்று


தகவல் சொல்லியனுப்பியிருந்தது


நிலாவிடம்


சூரியன் !.





  • கிளி ஜோசியம்

அடுத்த ஆறுமாசத்துக்கு

 

வீடு மாறக்கூடாது

 

நேரம் கூடவில்லைஎன்றான் ஜோசியன் .

 

"கிளி உனக்கு சீட்டெடுத்து கொடுத்த

 

நாளுண்டா ?", என்றேன்

 

முறைத்தவனைப் பார்க்காமல்


கிளியை பார்த்தேன்


கூண்டுக்கம்பியை கொத்திக்கொண்டிருந்தது .


நான்


திரும்பி நடந்தேன் !




  • எதிர்மறை

இன்னொரு குடம்


தேவையாயிருக்குமென


நினைக்கும்போதெல்லாம்


தண்ணீர் நின்றுவிடுகிறது


கார்பரேசன் குழாயில் !



-ஜெனோவா




--

Monday, September 7, 2009

பிரிவோம் சந்திப்போம்!


நண்பர்களே

உங்கள் அலைபேசிகளில்

என்னுடைய எண்ணை

வேண்டுமென்றே அழித்துவிடுங்கள்

சில காலத்திற்கு

உரையாடல்களை ஒத்திப்போடுவோம் .

பின்னொரு நாளில்

சந்திக்கும்போது வரும்

சில வினாடி மவுனங்களுக்காகவும்

நிகழப்போகும் தளுவல்களுக்காகவும்

இப்போது

காத்திருக்கும் தருணங்கள் அழகானவை .


-ஜெனோவா

--
Posted By ஜெனோவா to கைகாட்டி மரம் !! at 9/04/2009 06:07:00 PM

Friday, September 4, 2009

ஆதி கடவுள் !

ஆளில்லாத மொட்டைப்பாறையில்

தோழியொருத்தியுடன்

வெகுநேரம்

ஏதேதோ பற்றி

விவாதித்து விட்டு கிளம்புகையில்

"நீ என்ன சொன்னாலும் சரி

காதல்தான் முதல் கடவுள் ", என்றாள்.

நல்லவேளை

நான்

நாத்திகனென்று கூறி நகர்ந்தேன் !


-ஜெனோவா

Wednesday, September 2, 2009

பல்லியின் வால்



நாலைந்து பேர் அரிவாளோடு
 
துரத்திக்கொண்டு விரட்டி வருகையில்
 
வியர்த்து ஓடி
 
முன்கல்லில் காலிடறி விழுவதற்கு முன்பே
 
கழுத்தின் மத்தியமாய்

ஆழமாய் விழுந்தது ஒரு வெட்டு

அலறிக்கொண்டு எழ
 
வியர்வையாய் உறக்கம் வெளியேறியது
 
பயத்தில் நிரம்பிய மூத்திரப்பையால்
 
பாதி உறக்கத்திலேயே போகவேண்டியதாயிற்று
 
வேண்டுமென்றே
 
இழுத்து சாத்தி அடிக்கையில்
 
கதவிடுக்கில்
 
அறுபட்டு துடித்துக்கொண்டிருந்த
 
பல்லியின் வால்
 
ஏனோ
 
கனவில் வந்த

என்னையே பிரதிபலிப்பதாயிருந்தது !

 

-ஜெனோவா

--
Posted By ஜெனோவா to கைகாட்டி மரம் !! at 9/02/2009 01:49:00 AM

Monday, August 31, 2009



கை நிறையச் சம்பளம்
கைக்கு அடக்கமான மொபைல்
புதிதாய் வந்திருந்த கார்
பழைய வீட்டின் திண்ணை உறக்கம்
ஒன்றிரண்டு காதல்கள்
ஒரே ஒரு கல்யாணம்
இப்படி
என்னவெல்லாம் நினைத்திருந்ததோ
விபத்தொன்றில்
மூளைச் சிதறி இறந்தவனின் மனம் !

-ஜெனோவா

படம் : நன்றி இணையம்

Friday, August 28, 2009

அழகெடுத்து அருந்தியவள் !


மூன்றாம் ஜாமத்தின் நடுவில்
வந்த கனாவில்
தெரிந்த புரவிக்கு மூன்று கண்கள்
ரெட்டை கொம்புகள் இருந்த முதுகில்
பஞ்சு தலையணைகள்
மூன்றாம் கண்ணின் பால்வெளி வெளிச்சம்
எனை விழுங்கி
இழுத்துக்கொண்டோடியது
பிடரிமயிர் கூச்செறிய - அதன் வேகம்
அண்டத்தில் பாதியை அரைநாளில் அளப்பதாயிருந்தது
நடுவில் வந்த மலைகளை
கடந்து பறந்து ஓடி
கடைசியில்
நந்தவனத்தில் நின்றபோது - அதிசயித்தேன்
பிரபஞ்சத்தின் ஒளி படிமங்களனைத்தும்
கூடியதுபோலொரு
தேவதையர் கூட்டம்
சற்றே விலக்கினேன் பார்வையை
கூட்டத்தின் நடுவிலே
ஒருபானை அழகெடுத்து அருந்திவிட்டு
அமர்ந்திருந்தாய் நீ !
நீ குடிக்கையில்
அங்கங்கே சிதறிய சில துண்டங்கள்
அல்லிப்பூவாய் மலர்ந்திருந்தன .
ஏதோ ஒன்று நிகழ்வை கலைக்க - திரும்பினேன்
புரவிகள் மாயமாயிருந்தன
மாயங்களின் தாக்கம் குறையாமல் - முன் திரும்பினேன்
தேவதைகளும் மாயம் இப்போது -
நீ
என்னை நோக்கி வர ஆரம்பித்திருந்தாய்
நான்
கனவினை நீட்ட முயன்று கொண்டிருந்தேன் !

-ஜெனோவா

Wednesday, August 26, 2009

நன்றி : இணையம்


ஏதோ ஒரு
அடர்ந்த கருப்பு கவியும்
நிழற்பிரதேசத்தில்
முகம் மறைத்து நிற்கிறேன்
எதிர்பாரா தருணங்களில்
கொதித்த ரத்தநாளங்கள் பீறிட்டு
சதை பொதிந்த உடலெங்கும் ரத்தத்தின் கோரங்கள்
நரம்புகள் பின்னிய மூளையின்
எந்திர சத்தங்களுக்குள்
குரலேற்றி கத்த முனைந்து தோற்று
உறக்கங்கள் தொலைத்து
உறவுகளுடைத்து வேற்றுகிரகவாசியாய் திரிகிறேன்
கண்களுக்குள் வீசிய
வெண்ணிலாவின் வெளிச்ச படிமங்கள்
இராப்பொழுது உணவாகின்றன
கேளாத்தொலைவிலிருந்து
மாயை போல உன்குரல் - எனைச்
சேர்ந்தோ , சேராமலோ திரும்பியிருக்கலாம்
தெரியவில்லை .
கொதித்து வெடித்த ரத்த நாளங்களால்
உடல் முழுமையாய் வெந்துபோயிருந்தது .

-ஜெனோவா

Sunday, August 23, 2009

வாழ்க்கை



அது
இதுவென்று அலைந்து
அங்கொன்றும்
இங்கொன்றுமாய் சேகரித்து
நிரப்பி
பின்
கணக்கிட்டுப் பார்த்தால்
வாழ்க்கை
வெற்றிடமாகவே உள்ளது .

-ஜெனோவா

Saturday, August 22, 2009

தெருவோர பிள்ளையார் !

வழக்கமாக சாப்பிடும் இரவு நேர சாலை ஓர தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டு முடிக்கையில் , சத்தம் வராமல் விசும்பும் பெண்ணைப் போல மழை ஒழுகத்தொடங்கிருந்தது . சாப்பிட்டதற்கான முப்பது ரூபாயை கொடுத்து , அவன் சில்லறை தேடி மூன்று ரூபாய் எடுத்து தருவதற்குள் துளி சற்று பருத்தும் வேகத்துடனும் விழ ஆரம்பித்தது . நனைந்தாலும் நனைந்து விடுவேன் என்று பயந்து , மழைக்கு மரியாதை தருவதாயும் நினைத்துக்கொண்டு ஒரு மூடியிருந்த கடையின் வாசலில் ஒதுங்கிக்கொண்டேன் . ரோட்டை கடக்கையில் நிறைய சாலையோர கடைகள் அழகழகான குட்டி விநாயகர் சிலைகளை தாங்கி இருந்ததை கண்ட பின்புதான் நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி என்ற நியாபகம் வந்தது . களிமண்ணால் அழகாக செய்யப்பட்டு வண்ணங்கள் பூசிய பிள்ளையார்களை தரையில் வைத்திருந்தார்கள் . வீடுகளுக்கென்று பிரத்யோகமாக செய்யப்பட்டவைபோல் தெரிந்தது . மிகவும் குட்டியாகவும் அழகாகவும் இருந்தது . நூற்றுக்கும் மேல் சிலைகளை கொண்ட கடையில் ஒரு ஆள் நின்றுகொண்டிருந்தான் . நாலைந்து பொடியன்கள் அருகிலிருந்தார்கள்.
வேலை சிறுவர்களாக இருக்கலாம் .

மழை வலுக்க தொடங்கியவுடன் , பக்கத்திலேயே வைத்திருந்த பெரிய பெரிய பாலீத்தீன் கவர்களை வைத்து மூட தொடங்கினார்கள் . என்னருகில் இரண்டு பேர் நின்று கொண்டு ஜருதா சேர்த்த பீடா போட்டுக்கொண்டு கதைத்தபடி இருந்தார்கள் . எனக்கு அந்த ஜருதாவின் வாடை அடி வயிற்றை பிரட்டுவதுபோல் இருந்தது . சற்று தள்ளி நின்று கொண்டேன் . மழையை கிழித்தெரிந்தபடி சாலையில் வண்டிகள் போய் வந்த வண்ணம் இருந்தன . இருசக்கர வண்டிகளில் வந்தவர்கள் அவசரமாய் அங்கங்கே நிறுத்திக் கொண்டார்கள் . மழை இப்போது பெரிதாக ஒப்பாரி வைத்து அழுவதைப் போல கொட்டிக் கொண்டிருந்தது . தூரத்தில் எங்கோ சென்றுகொண்டிருந்த ஆம்புலன்சின் சத்தம் மழையில் மெதுவாக மிதந்து , எடையிழந்த காற்றைப்போல் செவிப்பறைகளில் மோதித் திரும்பியது . பிள்ளையார் கடைக்காரன் மட்டும் குடையை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான் .

இருபது நிமிட பே மழையில் சாலையின் ஓரங்களில் ஓடைப் போல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது . எனக்கு முன்னாள் குடை பிடித்து சென்றவன் ஒரு ஐஸ்க்ரீமை முழுங்கிவிட்டு கப்பை அந்த நீரில் எறிந்தான் . கப் தண்ணீரில் மிதந்தபடியே வேகமாக சென்று பிள்ளையார் சிலையில் தட்டி நின்று கொண்டது . அருகில் நின்றிருந்த காவல்காரர் ஜெர்க்கினை எடுத்து போட்டுக்கொண்டார் . நான் இடுப்புயரம் இருந்த துப்பாக்கியை பார்த்துக்கொண்டேயிருந்தேன் . சில சமயங்களில் , இவர்கள் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு அலைவது வீணான காரியமாகவே எனக்கு படும் . ஒருமுறை ஒரு காவல்காரர் சொன்னார் , அதில் பெரும்பாலும் ரவைகள் இருப்பதில்லை என்று . மழைச்சத்தம் கொஞ்சம் குறைந்திருந்தது . அந்த பீடா ஆசாமிகள் தூறலில்
நடக்க தொடங்கியிருந்தார்கள் .

இரண்டுக்கும் சற்று அதிகமான நிமிட நேரங்கள் யோசித்து ,நடக்கலாமென்று எத்தனித்த பொது , மழை மீண்டும் அடித்து பெய்ய தொடங்கியிருந்தது . அள்ளி முடிந்துகொண்டு சண்டைக்கு செல்லும் எதிர்வீட்டு அஞ்சலையைப் போல , மழையும் இன்று யாருடனோ தீவிர சண்டையிலிருப்பதாய் பட்டது .மழையின் வேகம் இன்னும் அதிகமாக , பிள்ளையார் போர்த்தியிருந்த பாலீதீன் சால்வை மெல்ல மழைக்கு வழிவிட்டது . அதற்குமுன்பே ஆறாய் ஓடிய மழை நீர் பாதி சிலைகளை கரைத்து விட்டிருந்தது. கடைக்காரன் மழையில் நனைந்து கொண்டே களிமண் சிலைக்களுக்கடியில் தேங்கிய நீருக்கு வடிகால் செய்து கொண்டிருந்தான் .

செவ்வண்ணம் பூசிக்கொண்டு வானம் மழையை ஊற்றிக் கொண்டிருந்தது . எதிர் மருத்துவமனை சன்னலில் பெண் ஒருத்தி மழையையே பார்த்துக்கொண்டிருந்தாள் . கணவனோ அல்லது அம்மாவோ , யாரோ ஒருவர் படுக்கையில் இருக்கலாம் . சிலர் குளிரில் புகைவிட ஆரம்பித்திருந்தார்கள் . காவல்காரர் ஒன்றும் சொல்லவில்லை . சிலைகளை காப்பற்ற முயன்று தோற்றுப்போன கடைக்காரன் குத்துக்காலிட்டு உட்கார்ந்து , மழையை வெறித்தபடி இருந்தான் . தீடிரென்று சத்தமாகவே புலம்பினான் . அவனை அதற்குமேல் பார்க்க இயலாமல் , மழையில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன் . களிமண் செருப்பில் ஒட்டியிருந்தது .

-ஜெனோவா

Friday, August 21, 2009

காதல் !

உன்னையும் சேர்த்து
எல்லாம்
மறந்து போனப் பிறகும் ,
பார்த்த மறுகணத்தில்
முந்தியடித்துக் கொண்டு
வந்து
விழுகின்றன
உன் தெற்றுப்பல் இளிப்புகள் !

...............


இன்னொருமுறை
எழுந்து
துரத்தினாலும் துரத்தும் -
ஓரமாய்
கண் திறந்து தூங்கிய
நாயை
பார்த்துக்கொண்டே கடந்தேன்
அந்த
ஆளில்லா வீதியை !

......
-ஜெனோவா

Tuesday, August 18, 2009

இப்படியுமா வேலை ?

அலுவலகத்தில் பதினான்கு மணிநேரம் வேலைப் பார்த்த களைப்பில் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன் . சற்று பதட்டமாக உணர்ந்ததால் பக்கத்திலிருந்த காபி மெஷினில் ஒரு கப் எடுத்துக்கொண்டு , லிப்டில் இறங்கினேன் . கை சிறிதாக நடுங்கியதுபோல் தெரிந்தது . ஏதோ ஒன்று உள்ளிருந்து இதயத்தை வேகமாக அடிக்க செய்தது . நடந்து வாசலுக்கு வந்தேன் , செக்யூரிட்டி வணக்கம் வைத்தான் , ஏதோ பயந்துபோய் காபி கப்பை வீசிவிட்டு வேகமாக நடந்தேன் . நடையின் வேகத்தைவிட இதய அடிப்பின் வேகம் அதிகமாயிருந்ததை என்னால் உணர முடியாமல் இல்லை .

ஏதோ ஓர் இனம் புரியாத , வகை தொகை பிரித்து அறிய முடியாத பயம் ஏறிக் கொண்டது . நல்ல வேளையாய், அதோ ஓர் பேருந்து வருகிறது , என்ன கூட்டம் அதிகமாயில்லை ? ஆமா ராத்திரி பதினோரு மணிக்கு என்னைப் போல சில பேர்வழிகளை தவிர எவன் வருவான் ? மொத்தமே எழு பேர்தான் இருந்தார்கள் , ஏறி அமர்ந்தவுடன்தான் கவனித்தேன் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் . பிரமையா? இல்லை இல்லை சர்வநிச்சயமாய் என்னையேதான் விழுங்கினார்கள் .முன்னால் அமர்திருந்தவனின் மீசை அடர்ந்து கனமாயிருந்தது , கோவைப்பழம் போல சிவந்த சாராயக் கண்களைக் கொண்டு ,ஜன்னலோரமாய் ஏதோ புலம்பிக்கொண்டே வந்தான் .

இந்த பேருந்து ஏன் கருமம் இவ்வளவு மெதுவாய் போய் தொலைக்கிறது ? இதற்கிடையில் நடுவில் ஏதோ நிறுத்தத்தில் நின்றது , நாலைந்து பேர் ஏறினார்கள் . பின்னாடி ஒருவன் நின்று கொண்டு பேருந்தை விட சத்தமாய் இருமலை சேர்த்துக் கொண்டு தும்மினான் - எனக்கு இதயம் வெளிவந்தது விடுமோவென பயம் அப்பிக்கொண்டது . இனம் புரியாத எதற்கு என்றே தெரியாத பதட்டம் , பயம் ... என்ன எளவு இது ? ... பக்கத்தில் ஒருவன் நின்று கொண்டு வந்தான் , அருகில் இடமிருந்ததை காட்டி அமர சொன்னேன் , தவிர்த்துவிட்டான் பரவாயில்லை . இப்போது முன்னால் இருந்த மீசைக்காரன்
மீசையை தடவிக்கொண்டே இந்தியில் ஏதோ கேட்டான் ? எனக்கு இந்தி தெரியாது என்பதைவிட என்ன கேட்டிருப்பான் ? என்றே மனசு சுற்றி சுற்றி வந்தது . மண்டைக்குள் பூரான் நெளிவதை என்னால் உண்மையாகவே இப்போது உணரமுடிந்தது. முன்னாலிருந்தவன் தொண்டையை செருமினான் , நான் முகத்தை திருப்பி பேருந்தின் முன்பக்கமாய் விழித்தேன் .

பேருந்தின் முன்னால் நடு ரோட்டில் ஒரு பால் வண்டிக்காரன் மொபைலில் சாவகாசமாய் பேசிக்கொண்டிருந்தான் , "அறுதலி" என்று மனதிற்குள் திட்டிக்கொண்டேன் . ரோட்டோரம் காளிக்கொவிலில்ஒரே ஒரு தீபம் மட்டும் எரிந்தது . யாரோ பக்கத்தில் மணி கேட்டார்கள் , வெடுக்கென்று கையை இழுத்து பின் நிதானித்து பதினொன்று இருபது என்றேன் . பேருந்தில் ஏறி இருபது நிமிடந்தான் ஆயிருந்தது ஆனாலும் இரவே கடந்து போனது மாதிரியும் , நான் வேறெங்கோ பயணிப்பது போலவும் தோன்றியது . எது நிஜமாய் நடக்கிறது ? எது நிழலாடுகிறது என்றே புரியவில்லை . மண்டைக்குள் இன்னும் பூரான் நெளிவது நிற்கவில்லை , ஆனால் அது உண்மை என்றே பட்டது.

பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களை கரைத்து என் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன் . "பைத்தியக்காரப்பய" என்று ஓட்டத்திலேயே இறக்கி விட்ட ஓட்டுனரை திட்டிக்கொண்டே அந்த மூத்திர சந்து வழியே நடந்தேன் . இப்படியே நேரே நடந்து இடது பக்கம் திரும்பினால் என் வீடு வந்துவிடும் . அடிவயிற்றில் முட்டிக்கொண்டு வந்தது , சந்திலேயே ஒதுங்கிக்கொண்டேன் . பயமெல்லாம் நீர்த்து போய் மூத்திரமாய் போவதாய் கற்பனை கூட்டிக் கொண்டேன், உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை .

வீட்டிற்கு இன்னும் யாரும் வந்திருக்கவில்லை , மணி பன்னிரண்டு ஆகப்போவுது எங்கே போய் தொலைந்தான்கள் இவங்கள் ?
முதுகில் ஏதோ சுமையை இப்பொழுதான் தூக்கி வைத்திருப்பது தெரிந்தது . மடிக்கனிணிப் பை . அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது பாதி எழுதிய நிலையிலிருந்த மென்பொருளை மீதியும் முடித்து , நாளைக்கு மீள்ப்பார்வைக்கு வைக்க வேண்டுமென்பது நினைவுக்கு வந்து மறைந்தது . இப்போது மண்டைக்குள் நாலைந்து பூரான்கள் வேகமாய் நெளு, நெளுவென்று நெளிந்தன .
மடிக் கணினிக்குள் நிறைய கரப்பான் பூச்சிகளும் , பல்லிகளும் இருப்பதாகப் பட்டது , அப்படியே அசையாமல் எடுத்துக் கொண்டு போய் முன்னாடி இருந்த வேப்ப மரத்தில் ஓங்கி படீரென்று அடித்து உடைத்துவிட்டு , மேனேஜருக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டேன் " என்னால் இரண்டு வாரங்களுக்கு அலுவலகம் வர முடியாதென்று " . பூரான் நெளிவது இப்போது நின்று போயிருந்தது .

-ஜெனோவா

Saturday, August 15, 2009

சுதந்திர தின நினைவு அஞ்சலி !

" சைனா பென் வித் டார்ச் லைட் சார் " டேக் இட் சார் .... காதருகில் சத்தம் கேட்டபொழுது விழித்துக் கொண்டேன் . டிராபிக் அதிகமுள்ள நகரமென்பதாலும், வீட்டுக்கு செல்ல எப்படியும் ஒன்றரை மணி நேரம் பிடிக்குமென்பதாலும் , அலுவலகத்தில் நான்கு பேருக்கென ஒதுக்கப்பட்ட காரில் ஏறியவுடன் தூங்கி விடுவதுண்டு .
இந்த குரலை கேட்டு விழித்தபோதுதான் நாங்கள் சிக்னலில் காத்துக்கொண்டிருப்பதை உணர முடிந்தது . காரின் ஜன்னலோரமாய் வந்து நின்ற அந்த சிறுவனின் முகம் , மிகவும் ஆர்வமாய் ஒளிர்ந்தது . வார்த்தைகளை விரயம் செய்யாமல் கண்களாலேயே என்ன ? என்பதுபோல் பார்த்தேன் . என் முகத்தில் ஓடிய இட்லி சாம்பார் முகக்களையை கண்டுகொண்டான்போல , தமிழிலேயே ..
"சார் , சைனா பென் சார் , டார்ச் லைட் கூட இருக்கு சார் ... வெறும் பத்து ரூவா சார் , வாங்கிக்கோ சார் " என்றான் , வேண்டாம் என்பதுபோல் தலையாட்டிவிட்டு முகம் திருப்பிக்கொண்டேன் . கன்னியாக்குமரியில் வெளிநாட்டு பயணிகளிடம் சுத்தி நின்று கொண்டு சங்கு விற்கும் பொடியன்கள் போல , இப்போது பெங்களூருவில் பெரும்பாலான சாலைகளில் சிக்னலுக்கு காத்திருக்கும் அந்த மூன்று வினாடிகளில்தான் பல வியாபாரங்கள் தொடங்கிமுடிகின்றன .

விளக்கு மஞ்சளில் இருந்து சிவப்பிற்கு பெயர்ந்து பச்சை திரும்புவதற்குள் , டார்ச் லைட் , பென் , காது குடையும் குச்சி , கண்ணாடி துடைக்கும் துணி என ஆளுக்கொன்றாய் கையில் தூக்கி கொண்டு ஓடிவருவார்கள் சின்ன பயன்கள் , சில சிக்னல்களில் வயதானவர்களையும் பார்த்திருக்கிறேன் . நாளை சுதந்திர தினம் என்பதால் இன்று சாலையில் நிறைய பேர் நாட்டுக் கோடியை ( ஆம் அந்த மூவர்ண கொடியேதான் ) எல்லோரிடமும் பேரம் பேசி ? விற்றுக்கொண்டிருந்தார்கள் . என் டிரைவர் கூட இருபத்தைந்து ரூபாய் சொன்னக் கொடியை பத்து ரூபாய்க்கு கேட்டு பார்த்துவிட்டு வேண்டாமென்றான் . எனக்கு ஒருபக்கம் ஆத்திரமாகவும் இன்னொரு பக்கம் அசுயையாகவும் இருந்தது . நாட்டுக் கொடிக்கென்று ஒரு மரியாதை உண்டா இல்லையா ? மனதிற்குள் பள்ளியில் படிக்கும்போது பாடிய " தாயின் மணிக்கொடி பாரீர் ..." பாடல் வந்து போனது . சாலையில் அதுவும் சிக்னலில் மூன்று நிமிட அமைதி பொழுதில் , அவனவன் பரபரவென்று கையில் பத்து கொடிகளை வைத்துக்கொண்டு பேரம் பேசி விற்ற பொழுது ... பாரத மாதவே வந்து தலைவிரிக்கொலமாய் , வழியும் கண்ணீருடன் அவனுக்காய் மடிபிச்சை கேட்பதாகவே எனக்கு தோன்றியது . கடைகளுக்குள் மட்டும் விற்கப்படும் சாராயத்திற்கு கூட ஒரு கவுரவம் இருப்பதுபோல மனதிற்கு பட்டது.

பக்கத்திலிருந்த வண்டிக்காரன் , கொடியை தடவிப் பார்த்துவிட்டு காட்டனா ? பாலியெஸ்தரா ? என்கிறான் , இன்னொரு கொடி விற்பவன் வியர்த்து வழிந்த முகத்தை கொடியினால் துடைத்து கொள்கிறான் . என்னால் இதையெல்லாம் வாய்விட்டு புலம்பாமல் பார்க்கமுடியவில்லை , கண்களை மூடிக்கொண்டேன் . மூன்று நிமிட காத்திருப்பு எனக்கு மூன்று மணி நேரமாய் தோன்றியது .

யோசித்துக்கொண்டே , பக்கத்திலிருந்த அனிதாவுடன் இதைப் பற்றி பேசினேன் . அனிதா குறைந்த வயதில் , பிரச்சினைகளை வெறும் கண்களாலேயே தெளிவாக பார்க்க தெரிந்த தமிழ்பெண் .

" அனிதா , இப்படி நாட்டுக்கொடியை சாலை நடுவில் மரியாதையில்லாமல் பேரம் கேவலப் படுத்துவது , பாரதத் தாயை ஏலம் விடுவது போல் உங்களுக்கு படவில்லையா ? " என்றேன் .

" ஜெனோவா , மாராப்பை இழுத்து மாற்றானிடம் கொடுத்தது நாம் , இன்று மானம் போகின்றதே என்று புலம்புகின்றோம் " என்றால் அவள் .

புரியாமல் , புதிராகப் பார்த்தேன் , அவளை ...

வெயில் வழி வந்தவனுக்கு நீர் மோர் கொடுத்து இளைபாற்றிய நாட்டில் , பாட்டிலுக்குள் தண்ணீரை அடைத்து அதை பாலை விட அதிகமாய் விற்க செய்தது நாம் .

சந்தை தெருவுக்கு போய்கொண்டிருந்தவனை சந்தடியில்லாமல் சூப்பர் மார்க்கெட் இழுத்து வந்தது நம் தப்பு .

நம் நாட்டு நேரத்துக்கே யோசிப்பவனிடம் போய் , இப்போது அமெரிக்காவில் காலை ஆறு மணி என்று பினாத்தியதும் நம் தப்பாகவே படுகிறது .... அவன் உழைப்பை நமக்கு சாதகமாக்க பிசினஸ் , பிசினஸ் என்று அடிக்கடி ஆங்கிலத்தில் சொல்லி வைத்தோம் . இப்பொழுது அவனும் பழகிவிட்டான் எப்படி பிசினஸ் செய்வதென்று ?

முதல் படிதான் நாட்டுக்கொடி , போகப் போக பாருங்கள் , நாயனம் , நாதஸ்வரம் , நாட்டியம் என்று இந்தியத் தன்மையே இல்லாமல் போகப் போகிறது .
சொல்லுங்கள் ஜெனோவா , இதில் நமக்கு எங்கிருந்து வந்தது மானப் பிரச்சினை ? என்றாள் .

எனக்கு தலை சுற்றுவது போல் உணர்ந்தேன் ...

பேசிக்கொண்டிருக்கும்போதே கை பேசி ஒலித்தது , மேனேஜர் கூப்பிட்டு நாளை அலுவலகம் வருமாறும் , எதோ முக்கியமான வேலை இருப்பதாகவும் கூறினார் .

நாளை சுதந்திர தினம் என்றேன் ,
க்ளையன்ட்ஸ் இருப்பது அமெரிக்காவில் என்றார் ...

வந்த கோவத்தை அடக்க முடியாமல் , வீட்டிற்கு வந்து டிவியை ஆன் செய்தேன் ..
யாரோ ஒரு அரசியல் வியா (வா) தி , " வி வில் பி த சூப்பர் பவர் இன் அனதர் டென் இயர்ஸ் " என்று மென்று கொண்டிருந்தார் ...

சத்தம் போட்டு அழ வேண்டும் போலிருந்தது எனக்கு , ஆனந்தக்கண்ணீர் விட்ட சுதந்திர திருநாளில் இப்போதெல்லாம் ஆத்திரத்தில் தான் கண்ணீர் வருகிறது ...

அட போங்கையா நீங்களும் உங்க சுதந்திரமும் ... சொல்ல மறந்திட்டேன் ..அறுபத்து மூன்றாவது சுதந்திர தின நினைவஞ்சலி உங்களுக்கும் எனக்கும் ........

- ஜெனோவா

Sunday, August 9, 2009

நீ எங்கிருக்கிறாய் ?

இந்த
ஆயிரம் முகங்களில்
எந்த முகம்
உன் முகம் !

வாசலுக்கு முன்னால்
உதரிப்போட்ட செருப்புகள் போல
களைந்து கிடக்கின்றன
கடலினுள் கட்டுமரங்கள் !

பெரிய நந்திக் கோவிலின்
தெப்பக்குளத்து படித்துறையை போல
அந்த பாற்கடலின் படித்துறையாய்
நம் அழகிய ஊர் !

அலையின் மடியிலே -கடலின் கரையிலே
நிலா முற்றமாய் உன் வீடு !
நிலவே நிழல் சாட்சியாய்
உன் முகம் !


காலையில்
ஒருமணிநேரம் வரும்
நல்ல தண்ணீர் பிடிக்க
கையில் குடத்தோடு நீ !
ஒரு மணிநேரத்தில்
ஓரிருமுறை வந்துபோகும்
உன்னை பிடிக்க
கையில் வலையோடு நான் !


ஒரே ராட்டினத்தில் சுற்றினாலும்
எதிரெதிர் திசைகளில் செல்லும் பெட்டிகள் போல
நம் பார்வைகள் !

என் நேர்க்கோட்டு பார்வையில்
உன் கண்கள் நாணி வளைகின்றன !
வெகு சில சமயங்களில் - முட்டிக்கொள்ளும்
உன் தீக்குச்சி பார்வையால்
என் ரோமங்கள் பற்றிஎரிகின்றன !

ஆதாமுக்கு
பாதி கடித்த ஆப்பிளை வழங்கிய காதல - உன் கையால்
கொஞ்சமும் குறையாக் காரத்துடன்
ஒரு பச்ச மொளகாயை தந்தது எனக்கு !
கடலுக்கு போகுமுன்
உன் அப்பாவுடன் குடித்த கஞ்சிக்கு
'தொட்டுக்க' கொடுத்து அது !
உன் சுண்டு விரல் போலவே இருந்த - அந்த மிளகாயை
கடிக்க கூட மனமில்லை ...
சும்மா ... ஒரு கடி கடித்துவிட்டு
எதோ நீ தந்த கடிதம் போல
பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டேன் !

கடல் முடிந்து , கரையேறுகையில்
ஆவி பறக்கும் கடுங்காப்பி வாளியுடன்
காற்றில் அரைத்தாவணி பறக்க
ஓடி வரும் உன்னை பார்க்கவே
சில மீன்கள் சாகாமல் துள்ளிக்கொண்டிருக்கும் !

நீ
தொட்டபிறகே கரையேருவதாய்
கட்டுமரம் அடம்பிடிக்கும் !
ஒருவழியாய் உன் நினைவுகளைத் தவிர - மற்றனைத்தையும்
ஒதுங்க வைத்துவிட்டு
வந்தமர்வேன் உன் வீட்டு முற்றத்தில் ...

கரிய சுட்ட கருவாட்டு வாசனையோடு
உன் வாசனையும் சேர்த்து
கஞ்சி தருவாய் - கஞ்சியை விட்டு விட்டு
உன் வாசனையை மட்டும் உறிஞ்சுவேன் நான் !

தண்ணீர் குழாய் ....
பச்சை மிளகாய் ...
ஆவிபறக்க கடுங்காப்பி ..
உன் வாசனையில் கஞ்சி ...

இப்போதெல்லாம்
சிரிக்க பார்க்கிறாய் ...
பார்க்க சிரிக்கிறாய் ...
காலை விரிந்து மாலை சுருங்கும் வரை
கூடவே இருக்கும் வலை போலவே நீயும் !

இம்சித்து திரிந்தாய்...
இரண்டற கலந்தாய் ...
என் இதய காந்ததினுள்ளே
திசை முள்ளாய் வந்தமர்ந்தாய் !

உன் வீட்டு முற்றம்
என் கோவிலானது -
உன் நினைவுகள்
என் சட்டை சுருக்கங்களாயின !


அன்று
பல ஊர் கூடி தேர் இழுக்கும்
அந்த வருட
அம்மன் கோவில் திருவிழா !

சில பத்தாயிர
சனங்கள் கூடி தேரிழுக்க
கடல் ஓரக் கடைவீதியில்
உன் பட்டு கைகளுக்கு
பளிங்கு வளைகள்
வாங்கி வைத்தோம் !

கண்ணாடி வளையல் என்றாலும்
என்னிடமிருந்து வந்தால்
வைர வளையல் என்று சொல்லி
தோள் சாய்ந்தாய் !


தேர் இழுப்பின் முடிவிலே
கடலில் கால்னநிக்கும் சடங்குக்காய்
மொத்த சனமும்
கடலை நோக்கி இறங்கிட ..
கடை வீதி மூச்சு விட முடியாமல் திமிறித்தான் போனது !
அப்போது உனக்கந்த ஆசை வந்தது
முதலில் நீதான் கால் நனைக்க
வேண்டுமென்ற விளையாட்டு ஆசை !
வாங்கி வைத்த வளயல்களோடு
உன்னையும் கைகளில் அள்ளிக்கொண்டு
கூட்டத்திற்கு முந்திக்கொண்டு - கடலடியில்
கால் நனைத்த வினாடி சந்தோசத்தின் சிரிப்புகள் முடியுமுன்னரே
வந்து தொலைத்து - அந்த
ராட்சச பேரலை ...

ஒரு
காட்டுயானையின் தாக்குதலை
தாங்கமுடியாத
வாழைமரத்தைப் போல -
பிடுங்கி எறியப்பட்டோம் இருவரும் ...
வினாடிப் பொழுதுகளில்
மொத்தக்கூட்டமும் உள்ளே இழுக்கப்பட
என்னோடு
பிணைக்கப்பட்டிருந்த உன் கையை பிடித்து
வெளியே இழுத்த கணத்தில்
மீண்டும் ஒரு அலை ...
அவ்வளவுதான்
என்னை பார்த்து கடைசியாய்
சிரித்த உன் முகம் - கை நழுவி செல்கையில்
அந்த கண்ணாடி வளையல்களை மட்டுமே விட்டுசென்றது !


உன் கல்லறை
என் கோவிலானது !
உன் நினைவுகள்
என் சிக்கல் விழுந்த வலைகளாயின !

கடல் கொண்டாலும்
நீ வருவாய் !
என்றாவது என் கட்டுமரத்தை தொடுவாய் !

இன்றும் பல ஆயிர சனங்கள்
கால் நனைக்க செல்கின்றன ...
இந்த ஆயிரம் முகங்களில்
எந்த முகம் உன் முகம் ?
எந்த கைகள்
என் பிடியை நழுவி சென்ற கைகள் ?

-ஜெனோவா


Saturday, August 8, 2009

ஸ்மைல் ப்ளீஸ் !

புகைபடமென்பது பாட்டிக்காலத்து சுருக்குப்பை காசைப்போல காலத்தை களவாடி வைத்துக்கொள்ளும் காகித அச்சாகவே இருக்கின்றது . சிறு வயதிலிருந்தே காமிரா என்பது ஒரு கனவுப்போருளாகவே இருந்து வந்தாலும் ... நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் எண்ணிக்கையோ நிறைய உண்டு ,குறிப்பிட்டு சொல்வதாயின் என்னுடைய எல்லா முகப்பாவங்களிலும் பல கருப்பு வெள்ளை படங்களும் , சில வண்ணப்படங்களும் கிட்டும் !


ஆரம்ப காலங்களில் எங்கள் ஊர் நடுநிலைப்பள்ளியில் படித்தபோது ,ஆண்டு இறுதிகளில் வகுப்புவாரியாக புகைப்படமெடுத்து தருவார்கள் . நான் வாத்தியார் புள்ளை என்பதால் எனக்கு இலவசமாகவே கிடைக்கும்,மற்றவர்கள் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வார்கள் . அந்த மேற்படி நாளில் காலையிலிருந்தே சந்தோசம் ( அது சந்தோசமா இல்லை ஆர்வமா என்று இன்றும் புரிவதில்லை ) தாளமுடியாமல் செக்காளிகளுடன் சேர்ந்து சாயங்காலத்தில் யார் யார் அருகில் யார் நிற்பதென்பது பேசி வைக்கப்படும் ,பெரும்பாலும் கடைசி வரிசையில் போடப்படும் உயர்ந்த பெஞ்சின் மேல் ஏறி நிற்பதற்கே போட்டிகள் அதிகம் ! அதே சமயத்தில் சட்டை ( வெள்ளை சட்டையும் , நீல நிற அரைக்கால்சட்டையும்) அழுக்காகி விடகூடாதென்பதிலும் கவனமாயிருந்தது இன்னும் நினைவிலிருக்கிறது . மாலை நாலு மணிக்கெல்லாம் அந்த வேப்பமரத்தினடியில் போட்டோ எடுக்க ஆரம்பிப்பார்கள் , முன்னமே பேசி வைத்தார்ப்போல செக்காளிகளுடன் சேர்ந்து நிக்கலாமேன்றால் இந்த போட்டோ எடுப்பவன் விடாமல் என்னையே குறிவைத்து " அந்த குட்டத்தம்பி முன்னால வாப்பா " என்பான் .... எல்லோருக்கும் ஆத்திரம் வரும் எனக்கு மட்டும் அழுகை பொங்கி வர கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரம் போட்டோவில் தெரியுமாறு செய்து , பின்பு அழுகையை அடக்கி மூஞ்சை மாற்றுவதற்குள் , அவன் போட்டோவை எடுத்து முடித்திருப்பான் - இப்பொழுதுதான் உண்மையிலே கண்ணீர் முட்டிக்கொண்டு வரும் . அப்படியே எட்டாம் வகுப்புக்கு வகுப்பாசிரியரான அப்பாவிடம் சென்று அடம்பிடித்து அவருடனாவது நிக்கலாமேன்றால் , இந்த பாழாய்ப்போன அக்காமார்கள் கூப்பிட்டு " சார் பையன் " என்று அருகில் நிற்க வைத்துவிடுவார்கள். மறுபடியும் முகம் கோணி , அழுகை முட்டுவதற்குள் சுதாரித்துக்கொண்டு போட்டோவிற்கு முறைத்து வைப்பேன். ஆம் நிஜமாகவே எனக்கு காமிரா முன் மட்டும்தான் முறைக்க வரும். ஆனால் இப்படியாக தோல்வியில் முடிந்த ஒவ்வொரு போட்டோபிடிப்பு நிகழ்விற்கு பின்னரும் இரண்டு நாள்களுக்கு வகுப்பிற்கு சென்றதில்லை . பரட்டைத்தலை பயலுகளை விட இந்த குட்டைப்பாவாடைகள் ரொம்பவே பளிப்பு காட்டுவார்கள் . யாராவது ஒவ்வொரு முறை " அழுமூஞ்சி அம்மனாங்கி " என ஆரம்பிக்கும்போதும் ," எங்க அப்பாகிட்ட சொல்றேன் பாரு " என்று அப்பாவை தாங்கி நிற்பேன் . இதனால்தானோ என்னவோ அதற்க்கப்புறம் அந்த பள்ளியில் இருந்து தாண்டிய பின்பும் கூட , காமிராவுக்கு முன்பு நிற்கும் ஆர்வம் வெகுவாக குறைந்து , காமிராவுக்கு பின்னால் நிற்கும் ஆசை அதிகமாகியது . அதற்கப்புறம் கல்லூரி முடித்து வேலைக்கு வந்த பின்னால் , ஒரு மெழுகுவர்த்தியை கூட விடாமல் இரண்டு மணிநேரம் எரியவிட்டு படம்பிடித்ததெல்லாம் தனிக்கதை .பேரனுடன் போட்டோ எடுக்க சென்றிருந்த அப்பா, போட்டோவுக்கு நிற்பதற்குள் இவன் பண்ணிய ரகளைகளை என்னோடு ஒப்பிட்டு கூறியபோது மனதிற்குள் நினைத்துகொண்டேன் அடுத்த பிறந்தநாளுக்கு அவனுக்கு காமிரா பரிசளிப்பதென்று!


-ஜோ

Wednesday, August 5, 2009

காதலி என்ற வெற்றிடத்துக்கு !

இன்றோ
நாளையோ - ஏகாந்தம் நிரம்பிவிட்ட
வேறோர் நாளிலோ
நாம் சந்திக்க கூடும் !

மழைக்காக ஒதுங்கி நிற்கும் வேளைகளில்
பேரூந்து நிறுத்ததிலோ -
மதியஉணவு வேளைகளில் - ஏதோவொரு
உணவகத்திலோ -
இல்லை
ரயில் நிலையம்
கடற்கரையோர கடைகள்
வெள்ளிக்கிழமை கோவில்கள் ...
இப்படி எங்கோ சில இடங்களில்
உன் முகத்தோடு
என் நியாபகங்கள் முட்டிட நேரிடலாம் !

என் குழந்தையோடு நானும்
கணவனோடு நீயும்
எதிரெதிர் வழிகளில் கடந்து பிரியலாம் !
தாண்டிச்செல்லும்போதோ
தாண்டிய பின்போ - முகம் காணாமல்
முறுவலித்து செல்லலாம் !

காலமும் உன் கணவனும்
கண்திறந்தால் -
இரண்டொரு வார்த்தைகளை பரிமாறிகொள்வோம்
குடும்பம் , சொந்த வீடு
உடன்படித்த கீதா -- இப்படி
நீண்டுகொண்டே போகும்பேச்சில்
தயவு செய்து
"எப்படி இருக்கிறாய் " என்று மட்டும்
கேட்டுவிடாதே
அழுதாலும் அழுதுவிடுவேன் நான் !

-ஜோ

Monday, August 3, 2009

கைகாட்டி மர(ன)ம் !

திரும்ப திரும்ப
யோசித்தும் பலனில்லை
எப்போது வாழ்க்கை நழுவியதேன்றோ
வாய்ப்புகள் வரப்புகளாய் மாறியதேன்றோ
யோசித்தும் அறியமுடியவில்லை !

வாலிபம் ஓங்கி - எதிர்
வாகனம் தெரியா அளவுக்கு
வேகத்தில் பாய்ந்த வாழ்க்கை -
அயர்ந்த பொழுதில்
வழுக்கிக்கொண்டு - பிடி
நழுவிக்கொண்டு
விழுந்து தொலைத்தது சாலை ஓரமாய் !

திக்கென்பது தெரியா நிலையிலே
திசைஎன்பதும் புரிய்படாமலே
தேங்கிய நான் - கைகாட்டி மரமாய்
சாலை ஓரமாய் !

கடந்து செல்பவர்களே !
முடிந்தால் , உங்களால் முடிந்தால்
எதிர் வருபவர்க்கு அறிவுறுத்துங்கள்
வாழ்கையில் (ன்) வேகம் ஆபத்தானதென்று !

கைகாட்டி மரமாய் நிற்பதன் வலி
அதுவுமாகி போன பின்பே புரியும்!

வாய்ப்புக்களை வடிகாலாக மாற்றுங்கள்
வரப்புகளாக அல்ல !!
- ஜோ