Friday, July 2, 2010

சிலந்தி வரைந்த சித்திரம் !

ஒட்டடை அடர்ந்திருந்த வளவுக்குள் இருந்த
தாத்தா காலத்து கற்தூண்களுக்கிடையே அந்தரத்தில்
வெகுநாட்களாய் தொங்கியபடி இருந்தது
சிலந்தி வரைந்த சித்திரம்
சித்திரத்தின் ஆதாரமுனைகள்
திடமற்றதென்பது அறிந்ததுதான்
ஏற்கனவே தெரிந்திருந்தாலும்
இழப்பு என்பது இழப்புதானே ?
சித்திரம் சிதிலமடைய ,
சிலந்தி
ஓடத் தொடங்கியது
எங்கோ சென்று ,எதையோ பற்றிக்கொண்டு
புதிதாய் ஒன்றை சார்ந்துகொண்டு
வாழ்ந்துதானே ஆகும் ? ஆனால்
விரட்டப்பட்ட
இதே இடத்திற்கே திரும்பவும்
வருமென்பது சந்தேகம்தான் .