Tuesday, August 18, 2009

இப்படியுமா வேலை ?

அலுவலகத்தில் பதினான்கு மணிநேரம் வேலைப் பார்த்த களைப்பில் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன் . சற்று பதட்டமாக உணர்ந்ததால் பக்கத்திலிருந்த காபி மெஷினில் ஒரு கப் எடுத்துக்கொண்டு , லிப்டில் இறங்கினேன் . கை சிறிதாக நடுங்கியதுபோல் தெரிந்தது . ஏதோ ஒன்று உள்ளிருந்து இதயத்தை வேகமாக அடிக்க செய்தது . நடந்து வாசலுக்கு வந்தேன் , செக்யூரிட்டி வணக்கம் வைத்தான் , ஏதோ பயந்துபோய் காபி கப்பை வீசிவிட்டு வேகமாக நடந்தேன் . நடையின் வேகத்தைவிட இதய அடிப்பின் வேகம் அதிகமாயிருந்ததை என்னால் உணர முடியாமல் இல்லை .

ஏதோ ஓர் இனம் புரியாத , வகை தொகை பிரித்து அறிய முடியாத பயம் ஏறிக் கொண்டது . நல்ல வேளையாய், அதோ ஓர் பேருந்து வருகிறது , என்ன கூட்டம் அதிகமாயில்லை ? ஆமா ராத்திரி பதினோரு மணிக்கு என்னைப் போல சில பேர்வழிகளை தவிர எவன் வருவான் ? மொத்தமே எழு பேர்தான் இருந்தார்கள் , ஏறி அமர்ந்தவுடன்தான் கவனித்தேன் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் . பிரமையா? இல்லை இல்லை சர்வநிச்சயமாய் என்னையேதான் விழுங்கினார்கள் .முன்னால் அமர்திருந்தவனின் மீசை அடர்ந்து கனமாயிருந்தது , கோவைப்பழம் போல சிவந்த சாராயக் கண்களைக் கொண்டு ,ஜன்னலோரமாய் ஏதோ புலம்பிக்கொண்டே வந்தான் .

இந்த பேருந்து ஏன் கருமம் இவ்வளவு மெதுவாய் போய் தொலைக்கிறது ? இதற்கிடையில் நடுவில் ஏதோ நிறுத்தத்தில் நின்றது , நாலைந்து பேர் ஏறினார்கள் . பின்னாடி ஒருவன் நின்று கொண்டு பேருந்தை விட சத்தமாய் இருமலை சேர்த்துக் கொண்டு தும்மினான் - எனக்கு இதயம் வெளிவந்தது விடுமோவென பயம் அப்பிக்கொண்டது . இனம் புரியாத எதற்கு என்றே தெரியாத பதட்டம் , பயம் ... என்ன எளவு இது ? ... பக்கத்தில் ஒருவன் நின்று கொண்டு வந்தான் , அருகில் இடமிருந்ததை காட்டி அமர சொன்னேன் , தவிர்த்துவிட்டான் பரவாயில்லை . இப்போது முன்னால் இருந்த மீசைக்காரன்
மீசையை தடவிக்கொண்டே இந்தியில் ஏதோ கேட்டான் ? எனக்கு இந்தி தெரியாது என்பதைவிட என்ன கேட்டிருப்பான் ? என்றே மனசு சுற்றி சுற்றி வந்தது . மண்டைக்குள் பூரான் நெளிவதை என்னால் உண்மையாகவே இப்போது உணரமுடிந்தது. முன்னாலிருந்தவன் தொண்டையை செருமினான் , நான் முகத்தை திருப்பி பேருந்தின் முன்பக்கமாய் விழித்தேன் .

பேருந்தின் முன்னால் நடு ரோட்டில் ஒரு பால் வண்டிக்காரன் மொபைலில் சாவகாசமாய் பேசிக்கொண்டிருந்தான் , "அறுதலி" என்று மனதிற்குள் திட்டிக்கொண்டேன் . ரோட்டோரம் காளிக்கொவிலில்ஒரே ஒரு தீபம் மட்டும் எரிந்தது . யாரோ பக்கத்தில் மணி கேட்டார்கள் , வெடுக்கென்று கையை இழுத்து பின் நிதானித்து பதினொன்று இருபது என்றேன் . பேருந்தில் ஏறி இருபது நிமிடந்தான் ஆயிருந்தது ஆனாலும் இரவே கடந்து போனது மாதிரியும் , நான் வேறெங்கோ பயணிப்பது போலவும் தோன்றியது . எது நிஜமாய் நடக்கிறது ? எது நிழலாடுகிறது என்றே புரியவில்லை . மண்டைக்குள் இன்னும் பூரான் நெளிவது நிற்கவில்லை , ஆனால் அது உண்மை என்றே பட்டது.

பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களை கரைத்து என் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன் . "பைத்தியக்காரப்பய" என்று ஓட்டத்திலேயே இறக்கி விட்ட ஓட்டுனரை திட்டிக்கொண்டே அந்த மூத்திர சந்து வழியே நடந்தேன் . இப்படியே நேரே நடந்து இடது பக்கம் திரும்பினால் என் வீடு வந்துவிடும் . அடிவயிற்றில் முட்டிக்கொண்டு வந்தது , சந்திலேயே ஒதுங்கிக்கொண்டேன் . பயமெல்லாம் நீர்த்து போய் மூத்திரமாய் போவதாய் கற்பனை கூட்டிக் கொண்டேன், உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை .

வீட்டிற்கு இன்னும் யாரும் வந்திருக்கவில்லை , மணி பன்னிரண்டு ஆகப்போவுது எங்கே போய் தொலைந்தான்கள் இவங்கள் ?
முதுகில் ஏதோ சுமையை இப்பொழுதான் தூக்கி வைத்திருப்பது தெரிந்தது . மடிக்கனிணிப் பை . அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது பாதி எழுதிய நிலையிலிருந்த மென்பொருளை மீதியும் முடித்து , நாளைக்கு மீள்ப்பார்வைக்கு வைக்க வேண்டுமென்பது நினைவுக்கு வந்து மறைந்தது . இப்போது மண்டைக்குள் நாலைந்து பூரான்கள் வேகமாய் நெளு, நெளுவென்று நெளிந்தன .
மடிக் கணினிக்குள் நிறைய கரப்பான் பூச்சிகளும் , பல்லிகளும் இருப்பதாகப் பட்டது , அப்படியே அசையாமல் எடுத்துக் கொண்டு போய் முன்னாடி இருந்த வேப்ப மரத்தில் ஓங்கி படீரென்று அடித்து உடைத்துவிட்டு , மேனேஜருக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டேன் " என்னால் இரண்டு வாரங்களுக்கு அலுவலகம் வர முடியாதென்று " . பூரான் நெளிவது இப்போது நின்று போயிருந்தது .

-ஜெனோவா

4 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Kadasila....Romba avasarama mudicha mathri iruku....
Narration is in ur style...
its like u r talking b4 me.Nice observation..but final touch sari illa...

ஜெனோவா said...

Thanks for the abservation Indu,
adutha writing la parru.. mostly tonight.. see you soon

ப்ரியமுடன் பாலா said...

முடிவு நல்லாத்தான் இருக்கு... ஆனால் நடைமுறைக்கு சாத்தியமில்லை !!

:(

என்ன செய்ய ? எப்படியேனும் வாழ்ந்து தான் தீர்க்கவேண்டி இருக்கு .